அரசமைப்பு ஓட்டைகளைக் காரணம் காட்டி தேர்தல்களுடன் விளையாட முற்படாதீர்கள்! – இரு தேர்தல்களையும் ரணில் நடத்தியே ஆக வேண்டும் என மஹிந்த வலியுறுத்து.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலையும், அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தியே ஆக வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலமும் 5 வருடங்கள். எனவே, அரசமைப்பில் உள்ள ஒருசில ஓட்டைகளைக் காரணம் காட்டி மக்கள் ஆணை வழங்கும் தேர்தல்களுடன் எவரும் விளையாடக்கூடாது. தேர்தல்களை உரிய காலத்தில் நடத்த வேண்டும்.

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியே தீர வேண்டும். ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க மொட்டுக் கட்சி அனுமதி வழங்காது.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணிலுக்கு அழுத்தம் எதனையும் வழங்கவில்லை. ஊடகங்களில் வரும் செய்திகள் எல்லாம் உண்மை இல்லை. இன்று பெரும்பாலான ஊடகங்கள் போலிச் செய்திகளையே வெளியிடுகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலையும், அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தியே ஆக வேண்டும். ஜனாதிபதி மேற்படி வாக்குறுதிகளை மீறமாட்டார் என்று நம்புகின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.