சென்னை-யாழ்ப்பாணம் இடையே புதிய விமானச் சேவை.

சென்னை-யாழ்ப்பாணம் இடையே இண்டிகோ நிறுவனம் புதிய தினசரி விமானச் சேவையை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு ஏற்கெனவே விமானச் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் வேறொரு நகரத்திற்கு விமானச் சேவை வழங்க இண்டிகோ திட்டமிட்டது. அந்த வகையில், விமானச் சேவைக்கு இரண்டாவது நகராக யாழ்ப்பாணத்தை அது தேர்வு செய்துள்ளது.

வணிகம், உள்கட்டமைப்பு மேம்பாடு, விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒத்துழைப்பு பேணப்பட்டு வரும் நிலையில், இப்புதிய விமானச் சேவை இரு நாடுகளுக்கு இடையேயான கலாசார, வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இண்டிகோ வெளியிட்ட அறிக்கையில், “சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமானச் சேவையைத் தவிர, இந்தியாவின் நான்கு நகர்களிலிருந்து கொழும்புக்கு 30 வாராந்திர விமானச் சேவையை நாங்கள் வழங்குகிறோம்.

“எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த இணைப்பு மற்றும் மேம்பட்ட வசதியை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்,” என்றது.

Leave A Reply

Your email address will not be published.