தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, வீடுகள் பிரச்சினை , ஆசிரியர் பிரச்சினை ஆகியவற்றுக்கு ஜனாதிபதியால் தீர்வு.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அதன்படி தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூ. 1700 வரை சம்பளத்தை உயர்த்துவதற்கு சம்பளக் கட்டுப்பாட்டுச் சபை இன்று (12) தீர்மானித்ததாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற “எக்வ ஜயகமு” ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் சம்பளப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வுகாண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தோட்டத் தொழிலாளர்கள் மக்கள் மரியாதை செலுத்துவதாக தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு பாடுபட்ட முன்னாள் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு நன்றி தெரிவித்தார்.

குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ. 1700 வரை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு மேலதிகமாக தோட்ட வீடுகள் பிரச்சினை மற்றும் தோட்டத்தில் ஆசிரியர் உதவியாளர் நியமனம் போன்றவற்றையும் தீர்க்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இன்று (12) முற்பகல் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தோட்டத் தொழிலாளி ஒருவருக்கு 8 பேர்ச்சஸ் காணி உரிமையை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும், ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அதே உரிமை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

2300 தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனங்களை வழங்குவதில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து விரைவில் அந்த நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.