எங்களை ஒருபோதும் விலை பேச முடியாது! – மக்களின் ஆணையுடன்தான் ஆட்சிப்பீடம் என்று சஜித் சூளுரை.

“என்னையும் எனது குழுவையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விலை பேச முடியாது. நாட்டு மக்களின் ஆணையுடன்தான் ஆட்சிக்கு வருவோம்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று திங்கட்கிழமை மாலை மீரிகம நகரில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“நான் சந்தர்ப்பவாத அரசியலைப் பின்பற்றுவதில்லை. 2018 ஆம் ஆண்டு 52 நாள் சூழ்ச்சியின்போது பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு 71 தடவை அழைப்பு விடுத்த போதும் அந்த அழைப்பை நான் நிராகரித்தேன். அந்தப் பிரதமர் பதவிக்கான மக்கள் வரம் எனக்குக் கிடைக்கவில்லை என்பதால் சந்தர்ப்பவாத அரசியலை மேம்படுத்தி பதவிகளின் பின்னால் செல்வதற்கு எனக்கு விருப்பமில்லை. அந்தக் கொள்கையினால்தான் கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் பதவியைப் பொறுப்பேற்க்குமாறு கூறியபோதும் அதனை நான் நிராகரித்தேன்.

அவ்வாறு அந்தச் சந்தர்ப்பத்தில் சென்று இருந்தால் இந்தச் நாட்டை சூறையாடி வளங்களையும் பணத்தையும் திருடிய திருடர்களின் பாதுகாவலராக நான் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். திருடர்களைப் பாதுகாக்கின்ற வாயில் காவலாளியாகவும் இருந்திருப்பேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொறுப்புகளின் ஊடாகவும் பணத்துக்காகவும் சோரம் போவதற்கு தயார் இல்லை. எந்தவொரு பிரபலமான பதவியாக இருந்தாலும் எவ்வாறான முன்மொழிவுகளை முன்வைத்தாலும் பொதுமக்களை மையப்படுத்திய அரசியலில் இருந்து விலகி செயற்படப்போவதில்லை. சஜித் பிரேமதாஸ ஆகிய என்னையும் எனது குழுவையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விலை பேச முடியாது. நாட்டு மக்களின் ஆணையுடன்தான் ஆட்சிக்கு வருவோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.