திரிபுராவில் கனமழைக்கு 10 பேர் பலி!

திரிபுராவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளத்துக்கு 10 பேர் உயிரிழந்தனர். 34 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திரிபுராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்துவரும் நிலையில், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் ஏற்கனவே அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளது.

தெற்கு திரிபுரா மாவட்டத்தின் தேவிபூர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். முஹீரி, லாகேங் நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 8 மாவட்டங்களைச் சேர்ந்த 6,620 குடும்பங்கள், மொத்தம் 34,100 பேர் 346 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் பெய்துவரும் கனமழையையடுத்து கல்வி நிறுவனங்களுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு, மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் மாணிக் சாஹா உத்தரவிட்டுள்ளார்.

மீட்புப் பணிகளுக்கு உதவக் கூடுதலாக நான்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மாநிலத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.