மனைவி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கணவர் சிக்கினார்!

தனது மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை, ஹிந்தகொட பகுதியில் நேற்று மாலை குடும்பத் தகராறு காரணமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியாலேயே இந்தச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 35 வயதுடைய வெலிமடை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, அந்தத் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் 5 , எஸ்.எப்.ஜி. ரக கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த பெண் (வயது 33 வயது) கைதான நபரின் மனைவி என்றும், அந்தப் பெண்ணின் கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், அவர் பதுளை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் என்றும், பதுளை – பசறை வீதியில் ஹிந்தகொட பகுதியில் 24 வயதுடைய பெண் ஒருவருடன் காதல் உறவு பேணி வந்தார் என்றும், இதை அறிந்த மனைவி மேற்படி பெண்ணின் வீட்டுக்குச் சென்ற வேளையிலேயே கணவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி சந்தேகநபர் முன்னாள் இராணுவச் சிப்பாய் என்றும் பொலிஸாரின் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவரைப் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.