சுன்னாகம் பொலிஸாரால் குடும்பஸ்தர் சித்திரவதை! – விசாரணைகளை ஆரம்பித்தது மனித உரிமை ஆணைக்குழு.

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குடும்பஸ்தரை எவ்வித காரணமும் கூறாது கைது செய்துள்ளனர் எனவும், கைது செய்த பின்னர் அவரைச் சித்திரவதைக்குட்படுத்தியுள்ளனர் எனவும் பாதிக்கப்பட்டவரின் மனைவி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த 28ஆம் திகதி நள்ளிரவு வேளை எமது வீட்டின் மதில் ஏறி பாய்ந்து, வீட்டின் முன் பக்க கதவைக் கால்களால் உதைத்து உடைத்து வீட்டினுள் அத்துமீறி நுழைந்த சுன்னாகம் பொலிஸார் எனது கணவரைத் தாக்கிக் கைது செய்தனர்.

கணவரை எதற்காகக் கைது செய்கிறீர்கள் என்று கேட்டவேளை அதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. கணவரின் கைதைக் தடுக்க நிறைமாதக் கர்ப்பிணியான நானும், கணவரின் அண்ணாவின் பெண் பிள்ளைகளும் முயன்ற வேளை எம்மையும் அவர்கள் தாக்க முற்பட்டனர்.

கணவரின் அண்ணாவின் மகள் கைத்தொலைபேசியைக் கையில் வைத்திருந்த வேளை வீடியோ எடுக்கிறீயா எனப் போனைப் பறித்து உடைக்க முயன்றனர்.

நாம் கணவரைப் பொலிஸார் காரணமின்றி கைது செய்து அழைத்துச் செல்வதனைத் தடுக்க முயன்ற போதிலும் எம்மைத் தாக்குவது போன்று அச்சுறுத்தி , கணவனை வீட்டில் இருந்து இழுத்துச் சென்று வெளியில் நின்ற ஓட்டோவில் ஏற்றிச் சென்றனர்.

கணவரைப் பொலிஸார் அழைத்துச் செல்லும்போதே அவரின் கண்களைக் கட்டியுள்ளனர். பின்னர் யாருடனோ தொலைபேசியில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர், கணவரின் பெயரைக் கூறி அவரைக் கைது செய்து விட்டோம் எனக் கூறியுள்ளார்.

நாம் நள்ளிரவே சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்றபோது , கணவரை அடித்து துன்புறுத்தி இருந்தனர். அது தொடர்பில் கேட்டபோது, சந்தேகத்தில் கைது செய்துள்ளோம் எனக் கூறி எம்மை அங்கிருந்து அனுப்பி விட்டனர்.

மறுநாள் 29ஆம் திகதி நாம் யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகம் சென்று முறையிட்டோம். அவர் அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் தொலைபேசியில் விசாரித்தார். அவர்கள் ஏதோ கூற எம்மை அனுப்பி வைத்தார்.

நாங்கள் மீண்டும் சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்ற வேளை கணவரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரான உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்டோர் பைப் , வயர்களால் மிக மோசமாகத் தாக்கி சித்தரவதை புரிந்தனர்.

கணவரை நிலத்தில் முழங்காலில் இருத்தி அவர்கள் தாக்கினர். தாக்குதலுக்கு இலக்கான கணவர் சத்தி எடுத்தார்.

கணவரைக் கைது செய்த பொலிஸார் 24 மணி நேரம் கடந்தும் நீதிமன்றத்தில் முற்படுத்தாது, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மிக மோசமான முறையில் சித்தரவதைக்குள்ளாக்கினர்.

பின்னர் அவரை விடுவித்த நிலையில் நாம் அவரைத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தோம். தற்போது எனது கணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.” – என்றார்.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது எனவும், பாதிக்கப்பட்ட நபரை திங்கட்கிழமை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேரில் பார்வையிட்டு அவரது வாக்கு மூலங்களைப் பெற்றுள்ளோம் எனவும், அதன் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம் என்றும் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.