ரணிலின் இந்த ஆட்சி தொடர வேண்டும்! இல்லையேல் நாடு மீண்டும் படுகுழியில்!! – இப்படி அமைச்சர் டக்ளஸ் எச்சரிக்கை.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஆட்சி தொடர வேண்டும். அப்போதுதான் கடந்த இரு வருட வளர்ச்சியைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல முடியும். இன்றேல் அதளபாதாளத்தில் நாடு மீண்டும் வீழும்.”

இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் உரையாற்றுகையில்,

“கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நாம் தவறவிடும் பட்சத்தில் அடுத்த ஐந்து வருடங்கள் அதனை நிவர்த்தி செய்வதற்காகக் காத்திருக்க வேண்டும்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் சரியான முடிவை எடுக்க வேண்டும். உண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஆட்சி தொடர வேண்டும். அப்போதுதான் கடந்த இரு வருட வளர்ச்சியைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல முடியும். இன்றேல் அதளபாதாளத்தில் நாடு மீண்டும் வீழும். அதனை உணர்ந்து ரணில் விக்கிரமசிங்கவைத் தெரிவு செய்ய வேண்டும். எங்களை நம்பி உங்கள் வாக்குகளை அளியுங்கள். கட்சி என்ற ரீதியில் அதற்கு நாம் பொறுப்பாக இருப்போம்.

நமது அரசியல் தலைமைகள் தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் உறவை வைத்துக் கொண்டு தமது சுயலாபங்களைப் பெற்ற பின்னர் அரசு ஏமாற்றிவிட்டது என்று மக்களைப் பலர் ஏமாற்றுவார்கள். நாம் அவ்வாறு ஒருபோதும் சொல்ல விரும்பவில்லை. நாம் சொல்வதைத்தான் செய்வோம். ஜனாதிபதியின் மீது நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.