இலங்கையின் புதிய ஜனாதிபதி தேர்தல் முடிவு தாமதிக்க காரணம் என்ன?

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் செப்டம்பர் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், இரண்டாவது சுற்று விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

அதன் அடிப்படையில் அனுரா குமார திசாநாயக வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

விருப்பு வாக்கு எண்ணிக்கையில், அனுரா குமார திசாநாயக முன்னிலை வகித்தார். அவருக்கு அடுத்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா (ஐக்கிய மக்கள் சக்தி) இருப்பதாகவும் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட 6.83 லட்சம் வாக்குகள் வித்தியாசம் இருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.

முன்னதாக, வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் அனுரா குமார திசாநாயக முன்னிலை வகித்தார்.

பிரேமதாசா இரண்டாவது இடத்திலும், தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்த நிலையில், ஒரு கட்டத்தில் அனுரா குமார திசாநாயக பெற்ற வாக்கு எண்ணிக்கை 50 விழுக்காட்டைத் தாண்டியது.

இதனால் அவர் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால், பிறகு அனுரா குமார திசாநாயக பெற்ற வாக்கு விழுக்காடு படிப்படியாகச் சரிந்த வேளையில், சஜித் பிரேமதாசாவின் வாக்கு விழுக்காடு அதிகரிக்கத் தொடங்கியது.

இலங்கை நேரம் பிற்பகல் 1 மணி நிலவரப்படி அனுரா குமார திசாநாயக 39.52 விழுக்காட்டு வாக்குகளும், சஜித் பிரேமதாசா 34.28 விழுக்காட்டு வாக்குகளும் பெற்றிருந்தனர்.

ரணில் விக்கிரமசிங்கே 17.41 விழுக்காட்டு வாக்குகளேயே பெற்றிருந்தார்.

இலங்கை அதிபர் தேர்தலில் வழக்கமாக, 50 விழுக்காட்டுக்கு அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். எந்த வேட்பாளரும் அவ்வாறு வாக்குகளைப் பெறாவிட்டால், வாக்கு எண்ணிக்கை அடுத்த சுற்றுக்கு நகரும்.

இலங்கையில் வாக்காளர்கள் அளிக்கும் தரவரிசை வாக்களிப்பை அடிப்படையாக வைத்து அதிபர் தேர்வு செய்யப்படுவார். அதிபர் பதவிக்காக வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களைத் தங்கள் முன்னுரிமையாக வரிசைப்படி குறிப்பிடலாம்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் வாக்குச்சீட்டில் முதல் விருப்பத்தேர்வாக வாக்காளர்கள் குறிப்பிட்டிருக்கும் வேட்பாளர்கள் பெயர்களே கணக்கில் எடுக்கப்படும்.

முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50 விழுக்காட்டுக்குமேல் வாக்குகளைப் பெறாவிட்டால், அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்களைத் தவிர அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்படுவார்கள்.

பின்னர் நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குகளில், வாக்காளர்கள் குறிப்பிட்ட இரண்டாவது விருப்பத் தேர்வு வாக்குகள் எண்ணப்படும்.

அந்த வாக்குகள், ஏற்கனவே முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு வேட்பாளர்களுக்கு இருந்தால் அவர்களுக்கு மறுபகிர்வு செய்யப்படும்.

அதிலும் முடிவு எட்டப்படாவிட்டால், வாக்காளரின் மூன்றாவது விருப்ப வாக்குகள் பரிசீலிக்கப்படும். இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் முழுமையான பெரும்பான்மையைப் பெறும்வரை இவ்வாறு விருப்பத்தேர்வு வாக்குகளை எண்ணும் பணி தொடரும்.

இலங்கை தேர்தல் வரலாற்றில் இவ்வாறு விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டது இதுவே முதல்முறை. 1982ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஒவ்வோர் அதிபர் தேர்தலிலும், முக்கியக் கட்சிகள் அல்லது கூட்டணிகளின் வேட்பாளர் முதல் சுற்றிலேயே அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவது வழக்கமாக இருந்தது.

பெரும்பாலும் இருமுனைப் போட்டிகளாகவே இருந்ததால், பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சீட்டுகளில் ஒரு வேட்பாளரை மட்டுமே தேர்வு செய்கிறார்கள்.

தங்கள் விருப்பப்படி முன்னுரிமை அடிப்படையில் பல வேட்பாளர்களை வரிசைப்படுத்தலாம் என்பதையே வாக்காளர்கள் பலர் அறியாமல் இருந்திருக்கலாம்; அல்லது அந்த தனிச்சிறப்பு வசதியைப் பயன்படுத்த வேண்டாம் என்று விட்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பலமுனைப் போட்டி நிலவியதால், இழுபறி ஏற்பட்டது. எனவே, முதல்முறையாக விருப்பத் தேர்வு வாக்குகள் மூலம் வேட்பாளரின் வெற்றி தீர்மானிக்கப்பட உள்ளது.

சனிக்கிழமை (செப்டம்பர் 21) நடந்த அதிபர் தேர்தல் வாக்களிப்பில் ஏறத்தாழ 76 விழுக்காட்டு வாக்குகள் பதிவாயின.

இறுதியில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தித் தலைவர் அனுரா குமார திசாநாயக தேர்வுபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அனுர திஸாநாயக்க – 5,740,179
சஜித் பிரேமதாச – 4,530,902

Leave A Reply

Your email address will not be published.