சின்னம் தெரிவில் முரண்பாடு! – தீர்மானமின்றி முடிவடைந்த பொதுக் கட்டமைப்பு பேச்சு.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பாகப் போட்டியிடுவது தொடர்பில் அரசியல் கட்சியினருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் இழுபறியில் முடிவு எட்டப்படாமல் முடிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியப் பொதுக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கூட்டான தமிழ் மக்கள் பொதுச் சபையினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று
வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ். தனியார் விருந்தினர் விடுதியில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளான புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ரெலோவின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம், ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சிறீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் அதன் மத்திய குழு உறுப்பினர்களான சிவநாதன் மற்றும் பார்த்திபன், ஜனநாயகப் போராளிகள் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் வேந்தன், செயலாளர் துளசி ஆகியோரும், சிவில் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிலாந்தன், யதீந்திரா, வசந்தராஜா, யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

இதன்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கருத்தைப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்சியினர் கோரியுள்ளனர். எனினும், ஒரு தரப்பு அரசியல் பிரமுகர்கள் அதனை விரும்பவில்லை.

ஒரு தரப்பினர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் குத்துவிளக்கு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் எனக் கோரியுள்ளனர். குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடுவதெனில் தாம் பொதுக் கட்டமைப்பாகப் போட்டியிடமாட்டோம் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்காத தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிவில் சமூகங்களின் கூட்டாகக் காணப்படும் தமிழ் மக்கள் பொதுச் சபையினர் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பாகத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தலை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் அமைப்புகளின் கூட்டான தமிழ் மக்கள் பொதுச் சபையானது தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதா? இல்லையா என்ற முடிவை எடுப்பதற்குச் சில நாட்கள் அவகாசத்தக் கேட்டுள்ளது.

இதையடுத்து நாளை சனிக்கிழமை தமிழ் மக்கள் பொதுச் சபையானது இது தொடர்பில் கூடி தமது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
……………..

Leave A Reply

Your email address will not be published.