வவுனியா கூட்டத்தில் குழப்பம்! – பொதுக் கட்டமைப்பு தனிநபர்களின் அமைப்பு என்ற கருத்தையடுத்து.

“ஜனாதிபதித் தேர்தலின்போது உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது 7 தனிநபர்களைக் கொண்ட அமைப்பு. அது சிவில் சமூக அமைப்பு கிடையாது” – என்று தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்த நிலையில் வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் குழப்ப நிலை ஏற்பட்டது.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மாற்றத்துக்கான மாற்று வழி என்னும் கருப்பொருளில் வவுனியா, வாடி வீட்டில் சிவில் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், “அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சிவில் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.” – என்று தெரிவித்தார்.

இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும், “ஏற்கனவே கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஒரு தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். பிறகு எதற்கு வேறு அமைப்பு?” – என்று கேள்வி எழுப்பினர்.

இதன்போது பதிலளித்த சிவகரன், “தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு என்பது 7 தனிநபர்களைக் கொண்ட அமைப்பு. அவர்களுக்குப் பின்னால் எந்த அமைப்பும் இல்லை. அவர்கள் செயற்பாட்டாளர்களே தவிர அமைப்புக்கள் அல்ல. நாம் அமைப்புக்களை உள்ளடக்கி இதை உருவாக்குவோம். அவர்களுடனும் தேவையெனில் பேசுவோம். அங்கும் எமக்குத் தெரிந்தவர்களே உள்ளனர். நிலாந்தன், ஜதீந்திரா, கணேசலிங்கம், விக்னேஸ்வரன் என 7 பேர் உள்ளனர்.” – என்றார்.

இதன்போது, சிவகரனின் கருத்துடன் உடன்படவில்லை எனத் தெரிவித்து வவுனியாவைச் சேர்ந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் அதிருப்தியை தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளியேறிச் சென்றனர்.

அவர்கள் கருத்துத் தெரிவித்தபோது, “இவர்கள் ஒரு தீர்மானத்துடன் வந்து அதனை இங்கு திணிக்க முயல்கின்றார்கள். ஏற்கனவே ஒரு தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு என அமைப்பு ஒன்று உள்ளபோது புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கி மக்களைக் குழப்பியடிக்கக்கூடாது. அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும். அதனால் வெளியேறுகின்றோம்.” – என்று தெரிவித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் க.அருந்தவபாலன், முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர்களான ப.டெனீஸ்வரன், அனந்தி சசிதரன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.