தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் – 3 அமைச்சர்களின் பதவி பறிப்பு

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றம்
தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரை கடித்தை ஏற்று ஆளுநர் மாளிகை சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று மாலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

அமைச்சர் பதவி பறிப்பு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டதோடு, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகிய மூவரும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டாலும் ராமச்சந்திரனுக்கு தலைமை அரசு தலைமைக் கொறடா பதவி வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்கள்
மின்சாரம் மற்றும் மது விலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு இலாகா இல்லாத அமைச்சராக அமைச்சராக தொடர்ந்த செந்தில் பாலாஜி இந்த ஆண்டு தொடக்கத்தில் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

3 நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் அளித்த நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டாக்டர் கோவி.செழியன், சா.மு.நாசர், பனைமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக அமைச்சரவையில் இணைந்துள்ள ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், அரசு கொறடாவாக இருந்த கோவி.செழியனுக்கு உயர்கல்வித்துறையும், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறையும், நாசருக்கு சிறுபான்மை நலத்துறையும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலாகா மாற்றம்
மேலும் 6 அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ள பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றப்படுகிறார். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்படுகிறார்.

வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மனிதவள மேம்பாடு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பால்வளம், காதி, கிராமத் தொழில்கள் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு பதிலாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.