தமிழரசின் ஆதிக்கத்தின் கீழ் சேர முடியாது! – சுமந்திரனின் அழைப்புக்கு எதிராகச் புளொட் தலைவர் சித்தர் கருத்து.

“நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாகப் போட்டிடுவது தொடர்பான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அறிவிப்பின் மூலம் ஆதிக்கம் தமிழரசுக் கட்சியினுடையதே. வந்து சேருங்கள் உங்களுக்கு நாங்களாகப் பார்த்து தருவோம் என்றவாறான நிலைப்பாட்டை கூறியிருப்பதாகவே தெரிகின்றது. அப்படியான நிலைப்பாட்டில் நாங்கள் போக முடியாது.”

இவ்வாறு புளொட் தலைவரும் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) பொதுச் சபைக் கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பல்வேறு விடயங்கள் தொடர்பாக இன்று கலந்துரையாடினோம். தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்பது நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்ற விடயம். ஒரு கட்சி மற்றக் கட்சியின் மீது ஆதிக்கம் செலுத்துவதை விடுத்து உண்மையான கூட்டாகச் செயற்பட வேண்டும்.

அன்று தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் நாங்கள் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது பல பிரச்சினைகள் உருவாகியிருந்தன. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தாங்கள் தனியாகப் போட்டியிடப் போவதாக தமிழரசுக் கட்சி முடிவெடுத்திருந்தது. அதன் பின்னர் சம்பந்தனுடன் நாங்கள் கலந்துரையாடச் சென்ற போதும் அவர் மிகத் தெளிவாக அதே கருத்தைச் சொல்லியிருந்தார். நீங்கள் தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்யப் பார்க்கிறீர்களா என்று அவரும் சொன்னார்.

இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு தமிழரசுக் கட்சி சென்றாலும் நாங்கள் இயங்காமல் இருக்கமாட்டோம்தானே. அப்படி இருக்கவும் கூடாது. எனவே, நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தோம். இப்போது பல கட்சிகள் இணைந்திருக்கின்றன.

அவர்கள்தான் விட்டுச் சென்றவர்கள். எனவே, அவர்கள்தான் வரவேண்டும். அவர்கள் வந்தால் எமது கட்சிகளோடும், சிவில் அமைப்புகளின் கூட்டோடும் கலந்துரையாடிய பின்னரே முடிவை எடுக்கலாம். தனிப்பட்ட முறையில் சொன்னால் அவர்களது வரவு இந்தக் கட்டமைப்பைப் பெரிதாக்கும். அது எனக்கும் விருப்பம்.

அனைவரும் இணைவது தமிழ் மக்களுக்குப் பலமாகவும் இருக்கும். ஆனால், அவர்கள் சொல்லியிருப்பது தமிழரசுக் கட்சி சின்னத்தில் என்று. இது பழையபடி தமிழரசுக் கட்சிதான் முடிவெடுக்கப்போகின்றது என்ற அடிப்படையிலும், ஆதிக்கம் தமிழரசுக் கட்சியினுடையதே – நீங்கள் சேருங்கள் உங்களுக்கு நாங்கள் பார்த்துத் தருவோம் என்றவாறான ஒரு நிலைப்பாட்டையே கூறியிருக்கின்றார்கள். அப்படியான நிலைப்பாட்டில் நாங்கள் போக முடியாது. அனைவரும் சம பங்காளிகளாக ஒரு கூட்டமைப்பாக இணைந்தால் அதில் சேர முடியும். அதற்கான நேர காலம் இருக்கின்றதோ தெரியாது. அவர்கள் மூன்று நாட்களையே அவகாசமாகக் கொடுத்துள்ளனர்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சங்கு சின்னத்தை எடுப்பதற்கான ஒரு அபிப்பிராயம் இருந்தது. அதற்கான முயற்சியைச் செய்வதாகத் தீர்மானித்திருக்கின்றோம். அதனைச் செய்வோம்.

அத்துடன் இளைஞர்களையும் நிச்சயமாக உள்ளே கொண்டுவரவேண்டும். அதேபோல் அனுபவம் உள்ளவர்களும் இருக்க வேண்டும். இருந்தாலும் அப்படி ஒரு கருத்தாக்கம் மக்கள் மத்தியில் இல்லை. தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதற்காகச் சிலர் உருவாக்கும் ஒரு கருத்தே இது. இது கட்சிகளைப் பலவீனப்படுத்துகின்ற ஒரு விடயம். நாங்கள் கடந்த முறையும் இளைஞர்களை நிறுத்தியிருந்தோம். இப்போதும் நிச்சயமாக இளைஞர்கள் கேட்பார்கள்.

தமிழ்க் கட்சிகள் பிரிந்து நிற்பது பிரதிநிதித்துவத்தில் நிச்சயமாகத் தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்காகவே ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று பார்க்கின்றோம். சிலர் சேர முடியாத நிலை இருக்கினறது. குறிப்பாக டக்ளஸ் தேவானந்தாவும், நாங்களும் சேர்வது கஷ்டமான விடயம். அரசுடன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தால் அரசு சொல்வதையே சொல்ல வேண்டிய சங்கடம் இருக்கினறது. எமது சார்பாகக் கதைக்க முடியாது. மௌனியாகவே இருக்க வேண்டும். அபிவிருத்திப் பணிகள் செய்யலாம். ஆனால், 1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நியாயமான ஒரு தீர்வை நோக்கியே தமிழ் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.” – என்றார்.
………….

Leave A Reply

Your email address will not be published.