ஆயுதமேந்திய இளைஞர் எழுச்சியிலிருந்து செயற்குழுவரை: JVPயிலிருந்து NPP நோக்கிய பயணம்

2024 ஜனாதிபதித் தேர்தல் , இலங்கையின் வரலாற்றில் முதல் இடதுசாரிச் சார்பு கொண்ட நிறைவேற்று ஜனாதிபதி பதவியேற்பாக முடிந்த பிரபலமான தேர்தலுடன் முடிவடைந்தது.

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையின் பின்னர் வெற்றி பெற்றார்.

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) இலங்கையில் இளைஞர் எழுச்சிகள் இரண்டிற்கும் தலைமை தாங்கிய ஒரு கட்சியாகும், மேலும் அவர்களின் அரசியல் சக்தி ஆயுதப் போராட்டத்தின் மூலம் அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவது முதல் ஜனநாயகத்தில் மக்கள் வாக்கு மூலம் அரச அதிகாரத்தைப் பெறுவது வரை கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களாக நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளது.

ஒரு புதிய அரசியல் சகாப்தத்தின் ஆரம்பம் – 1965

1917 அக்டோபர் 25 இல் ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் சோசலிச அரசாங்கமாக மாறிய சோவியத் யூனியனில் உள்ள லுமும்பா பல்கலைக்கழகத்தில் கல்வி பயில உதவித்தொகை பெற்று , அங்கு படித்துக் கொண்டிருந்த இளைஞரான ரோகண விஜேவீர, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக லுமும்பா பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

சிறுவயதிலிருந்தே தந்தையின் அரசியல் சார்புகளுடன் இடதுசாரி அரசியலைப் புரிந்துகொண்ட அவர், 1965 ஆம் ஆண்டு வெசாக் தினத்தன்று வேறு சில இளைஞர்களுடன் காலியில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், அடுத்த தசாப்தங்களில் இலங்கையில் ஒரு பெரிய அரசியலை பற்றி கொண்டு வந்த மக்கள் விடுதலை முன்னணியின் எழுச்சி ஆரம்பமாக அமைந்தது.

1971 கைதானோர் வித்யோதய மற்றும் வித்யாலங்கார பல்கலைக்கழகங்கள் (தற்போதைய ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களனிப் பல்கலைக்கழகங்களும் கூட) சிறை முகாம்களாக மாற்றப்பட்டன.
1971 கைதானோர் வித்யோதய மற்றும் வித்யாலங்கார பல்கலைக்கழகங்கள் (தற்போதைய ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களனிப் பல்கலைக்கழகங்களும் கூட) சிறை முகாம்களில்:…..

இலங்கையின் முதல் இளைஞர் ஆயுதப் போராட்டம் – 1971

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ் மூடிய பொருளாதார அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், நாடு முழுவதும் வரிசைகளின் சகாப்தம் தொடங்கியது, மேலும் அரிசி மற்றும் துணி போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கூட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வேலையில்லாத் திண்டாட்டமும் சாதிய ஒடுக்குமுறையும் அதை மேலும் மோசமாக்கியது.

குறிப்பாக, இது தொடர்பாக இளைஞர் சமூகத்தில் பெரும் அசௌகரியம் நிலவியதால், அப்போது ஜனதா விமுக்தி பெரமுனாவால் முன்வைக்கப்பட்ட அதிகாரத்தை மக்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பல இளைஞர்கள் ஒன்றிணைந்தனர்.

இதனால் 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி காலை நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களை ஒரே நேரத்தில் தாக்கி கைப்பற்ற திட்டமிடப்பட்டது. ஆனால், பின்னர் அந்த திட்டம் மாற்றப்பட்டு அன்று இரவே தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. அப்போது கட்சியின் தலைவர் ரோகண விஜேவீர யாழ்ப்பாண சிறையில் இருந்தார்.

இந்த ஆயுதப் போராட்ட முயற்சி , தகவல் தொடர்பு இல்லாத காரணத்தால் தோல்வியில் முடிவடைந்ததால், ஒரு குழுவினர் காலையிலும், மற்றைய குழுவினர் இரவிலும் போலீஸ் நிலையங்களை தாக்கினர். இதேவேளை, அரசாங்கம் பெருமளவிலான சந்தேக நபர்களை கைது செய்ததுடன், நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகள்,  சந்தேக நபர்களால் நிரம்பியிருந்ததால், வித்யோதய மற்றும் வித்யாலங்கார பல்கலைக்கழகங்கள் (தற்போதைய ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களனிப் பல்கலைக்கழகங்களும் கூட) சிறை முகாம்களாக மாற்றப்பட்டன.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் பல சிறப்பு விதிமுறைகளை இயற்றி, பிரேத பரிசோதனையின்றி இறந்த உடல்களை எரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டன.

1971ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளது.

JVP செய்த வன்முறைகள் ….

“1971 ஆம் ஆண்டு நடந்த போராட்டம் ஒரு விபத்தோ அல்லது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதியோ அல்லது ஒரு தனிநபரின் எதேச்சதிகாரத்தின் விளைவாகவோ அல்ல. அது அன்றைய அரசியலில் உருவாகியிருந்த நிலைமைகளின் தர்க்கரீதியான விளைவு.”

இதற்காக, குற்றவியல் நீதி ஆணைக்குழு சட்டம், 1972ன் கீழ் அதிகார வரம்புடன் கூடிய சிறப்பு ஆணையம் நியமிக்கப்பட்டு, ஏப்ரல் “மகாநாடுவ” எனப்படும் விசாரணையில், ஜனதா விமுக்தி பெரமுனாவின் 41 தலைவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

முதல் ஜனாதிபதி தேர்தல் – 1982

முதலாவது ஆயுதப் போராட்டத்தின் தோல்வியின் பின்னர், ஜனதா விமுக்தி பெரமுன தேசிய அரசியலில் நுழைந்தது,  அதன் தலைவர் ரோஹன விஜேவீர 1982 இல் நடைபெற்ற முதல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.

ஜனதா விமுக்தி பெரமுன முதன்முறையாக மணி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டது.

273,428 வாக்குகளைப் பெற்ற ரோஹன விஜேவீர மூன்றாவது இடத்தைப் பிடித்தார், ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஜே. ஆர். ஜெயவர்தன வெற்றி பெற்றார்.

தடை செய்யப்பட்ட கட்சியின் இரண்டாவது கிளர்ச்சி 1988/89

1983 இல் இலங்கையில் கறுப்பு ஜூலை உட்பட இனக்கலவரங்கள் காரணமாக பல அரசியல் கட்சிகளை ஜே. ஆர். ஜயவர்தன அரசாங்கம் தடை செய்தபோது , அந்த கட்சிகளில் ஜனதா விமுக்தி பெரமுனாவும் இடம் பெற்றது.

இதனால் அக்கட்சியின் உறுப்பினர்களால் கட்சி என்ற பெயரில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது.

1988/89 காலப்பகுதியில், இலங்கையில் இரண்டாவது இளைஞர் ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது, அது ஜே.வி.பி மற்றும் அப்போதைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு கரும்புள்ளிகளைச் சேர்த்த நிகழ்வுகளின் சங்கிலியாகும். அதன் பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் இந்த நிகழ்வுகள் முன்னுக்கு வருவதைக் காணக்கூடியதாக இருந்ததுடன், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலிலும் இந்த நிகழ்வுகள் பிரதானமாக இருந்த தேர்தல் மேடைகளின் கருப்பொருளாக அமைந்தது.

1987 ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டாகும், அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனே இடையே இந்திய-இலங்கை ஒப்பந்தம் அதே ஆண்டில் கையெழுத்தானது.

இந்திய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபைகள் நிறுவுதல் மற்றும் இலங்கையில் இந்தியப் படைகள் தரையிறக்கப்பட்டதன் விளைவாக, ஜனதா விமுக்தி பெரமுன இந்திய விரிவாக்க எதிர்ப்பாக “தேசபக்தி மக்கள் இயக்கம்” என தன்னைத்தானே ஒருங்கிணைத்து பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புகளை தொடங்கியது.

1987 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் , அன்றைய மே தினத்தை தடைசெய்ததோடு, நாரஹேன்பிட்டி அபயாராமவில் தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் உள்ளிட்ட அரச எதிர்ப்பு இயக்கங்கள் நடத்திய மே தினக் கொண்டாட்டத்தின் பின்னர் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக் கழக மாணவனான கித்சிரி மெவன் ரணவக்க மற்றும் தொழிலாளரான ஆனந்தலால் கிரிபத்கொட போலீசாரது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்.

அந்த நேரத்தில் தொடங்கிய “88/89 பயங்கரவாத காலத்தில்” சுமார் 60,000 இளைஞர்கள் மற்றும் பெண்கள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் சித்திரவதை முகாம்களில் மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். இன்னும் பலர் காணாமல் போயினர், அவர்கள் பற்றிய உண்மை இன்றுவரை வெளிவரவில்லை.

1989ஆம் ஆண்டு உலப்பனை பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் ‘அத்தநாயக்க’ என்ற புனைப் பெயரில் பதுங்கியிருந்த ரோஹன விஜேவீர , இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார். (அது இன்னொரு கதை)

மேலும், ஜனதா விமுக்தி பெரமுனா மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், கொலைகள் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

எண்பதுகளின் பிற்பகுதியில் “பயங்கரவாத காலத்தில்” ஜனதா விமுக்தி பெரமுனா நடத்திய கொலைகள் உட்பட “நடக்கக்கூடாத செயல்களுக்கு” 2014ல் அனுரகுமார திஸாநாயக்க, பிரித்தானியாவிற்கு விஜயம் செய்திருந்த போது அப்போதைய பிபிசி சந்தேசய சிங்கள ஒலிபரப்புக்கு அளித்த பேட்டியில் மன்னிப்பு கோரினார்.

2005ல் மகிந்தவுடன் , JVP தேர்தல் ஒப்பந்தம்

 

சோசலிசத்திலிருந்து தேசியவாதம் வரை

சோசலிசக் கருத்துக்களை அடித்தளமாகக் கொண்டு தொடங்கிய ஜனதா விமுக்தி பெரமுன, 1990களின் பிற்பகுதியிலிருந்து 2000கள் வரையிலான காலகட்டத்தில் படிப்படியாக தேசியவாதத்தை நோக்கித் திரும்பியது.

எனினும், ஜனதா விமுக்தி பெரமுன ஆரம்பம் முதலே ஒரு குறிப்பிட்ட தேசியவாதப் போக்கைக் கொண்டிருந்தது என்பதைத் தெளிவாகக் காணக்கூடிய நிகழ்வுகளில் ஒன்று, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ரோஹன விஜேவீர, 1985 இல் எழுதிய “தமிழீழ போராட்டத்திற்கு என்ன தீர்வு? ?” என்ற புத்தகமாகும். அதில் இடம்பெற்றுள்ள விடயங்கள் தொடர்பில் கட்சிக்குள் விவாதங்கள் எழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

2002 பொதுத் தேர்தலுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பொது முன்னணி அரசாங்கம் வீழ்ச்சியடையாமல் இருப்பதற்கான ஆதரவைக் கொடுக்க 2001 இல் ஜனதா விமுக்தி பெரமுன ஆதரவளித்தது.

அது அக்கட்சி கூட்டணி அரசியலுக்குள் பிரவேசித்த முதல்முறை எனலாம்.

அப்போது, ​​மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் , JVP கூட்டணி சேர்ந்து, பின்னர் அந்தக் கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட்டு 39 நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்றியது.

2004 பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் இருந்து அதிகூடிய வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவான அனுரகுமார திஸாநாயக்க விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை அமைச்சராகப் பணியாற்றினார்.

இருப்பினும், இந்த கூட்டணியின் ஆயுள் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

2004-2005 காலப்பகுதியில், ஜனதா விமுக்தி பெரமுன, போருக்கு ஆதரவான ‘மானேல் மல் வியாபாரய’ மற்றும் ‘தேச ஹிதைஷி அமைப்பு ‘ போன்ற தேசியவாத அமைப்புகளுடன் இணைந்ததன் மூலம் வடக்கில் அப்போதைய உள்நாட்டுப் போரின் தொடர்ச்சியில் குறிப்பிடத்தக்க மற்றும் செல்வாக்குமிக்க தலையீட்டாளராக செயல்பட்டது.

2005 ஆம் ஆண்டில், ஜனதா விமுக்தி பெரமுன ,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் 12 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையில் கையெழுத்திட்டதுடன், அன்றைய விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களை மறுபரிசீலனை செய்வது மற்றும் அதில் நோர்வேயின் தலையீடு ஆகியவை அடங்கிய நிபந்தனைகள் இடம்பெற்றன.

மேலும், 2005ல், ஜனதா விமுக்தி பெரமுனா, “பயங்கரவாத அமைப்புகளுடன் அரசு ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடாது” என, சுனாமி நிவாரணத் திட்டத்திற்காக, அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய, அடிப்படை உரிமை மனு தாக்கல் ஒன்றை செய்தது. அதன்படி, அந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போதைய, ​​ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, ஜே.வி.பி.யின் பிரபல பேச்சாளர்களாக ‘மானெல் மல் இயக்கத்தில்’ செயற்பட்டார்கள்.

யுத்தத்தின் இறுதிப் பாதியில் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் பின்வரும் கருத்துக்களை வெளியிட்டார்.

“பயங்கரவாதத்தை தோற்கடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது, ​​குறிப்பாக கபிதிகொல்லேவ பிரச்சனை வந்தது. அந்த நேரத்தில், எங்கள் தோழர்கள், எங்கள் நிவாரண சேவை படையணி, அந்த படைகளுக்கு சென்று முகாம்களை கட்டிக் கொடுத்தனர். பதுங்கு குழிகளை அமைத்து கொடுத்தனர். நாங்கள் அந்த மாகாணத்தில் அனைத்தையும் செய்தோம்.

அது மாத்திரமன்றி பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேசத்துக்கு ரெட் ஸ்டார் இராணுவத்தினர் யாரும் செல்லாத கிராமங்களுக்குச் சென்று பதுங்கு குழிகளை அமைத்து வீதிகளை அமைத்து அந்த இராணுவ வீரர்களுக்கு அதிகபட்ச தைரியத்தை வழங்கி வருகிறோம்.

அன்றைய காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்ட ” மானெல் (லில்லி) மலர் பிரச்சாரம்” மூலம் ராணுவ வீரர்கள் “பெருமையுடன் மக்களாக வாழக்கூடிய சூழலை உருவாக்கினோம்” என்றும் அவர் கூறினார்.

எனினும் 2008 ஆம் ஆண்டு கட்சியின் பிரதான பேச்சாளராக இருந்த விமல் வீரவன்ச முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கொண்டமை பேசுபொருளாகியது.

2005ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்த ஜனதா விமுக்தி பெரமுன, ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க , 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது.  அக்காலமான , 1994 முதல் கட்சியின் மறுசீரமைப்புக்குப் பிறகு, ஜனதா விமுக்தி பெரமுனா தேர்ந்தெடுத்த வியூகங்கள் குறித்து கட்சிக்குள் மோதல்கள் எழுந்தன.

உட்கட்சி பூசல்களின் விளைவாக பிளவு – 2011

கட்சிக்குள் தொடர்ந்த உட்கட்சி பூசல்களின் விளைவாக 2011 இல் கட்சி பிளவுபட்டது. ஜனதா விமுக்தி பெரமுன தேர்தல்வாதம், தொழிற்சங்கவாதம், சீர்திருத்தவாதம் மற்றும் தேசியவாதம் ஆகியவற்றில் வீழ்ந்துவிட்டது என குற்றம் சாட்டி, ஜனதா விமுக்தி பெரமுனாவில் இருந்து பிரிந்த குழு, செப்டம்பர் 2011 இல் அழைக்கப்பட்ட சிறப்பு மாநாட்டில் முன்னணி சோசலிச கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை உருவாகியது. அந்தக் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் குமார் குணரத்தினம்.

பிரிவினையின் போது இரு கட்சிகளுக்கும் இடையே மோதல்களும் ஏற்பட்டன.

அதன்பிறகு, ஜனதா விமுக்தி பெரமுனவிலிருந்து , வேறுபட்ட பல்வேறு அரசியல் வியூகங்களைப் பின்பற்றிய முன்னணி சோசலிச கட்சி , இம்முறை ஜனாதிபதி தேர்தல் உட்பட, 2015 மற்றும் 2019களிலும் ஜனாதிபதித் தேர்தல்களில் தனித்தனியாக போட்டியிட்டனர்,

கடந்த 2022ஆம் ஆண்டு காலிமுகத் திடல் அரகலய போராட்டத்தின் போது, ​​“அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வெளியே” என்பது அவர்களின் முழக்கமாக இருந்தது, இம்முறை அக்கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி நுவான் போபகே, போராட்டத்தில் ஈடுபட்ட சில கட்சிகள் உருவாக்கிய கூட்டணியின் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.

சோமவன்சவிலிருந்து அநுர வரை : தலைமைத்துவ மாற்றம்

1969 ஆம் ஆண்டு ஜனதா விமுக்தி பெரமுனாவில் இணைந்த சோமவன்ச அமரசிங்க, 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு 1977 ஆம் ஆண்டு மீண்டும் விடுதலை செய்யப்பட்டார். 1988/89ல் அடக்குமுறை காரணமாக நாட்டை விட்டு , லண்டனுக்கு வெளியேறிய அவர், கட்சி மறுசீரமைப்பின் விளைவாக 1990 இல் இலங்கைக்கு திரும்பி ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவரானார்.

அவர் பல வருடங்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதோடு, 1995 முதல் அவர் தலைமைத்துவத்தை விட்டு வெளியேறும் நாள் வரை, கட்சியின் பொதுச் செயலாளராக டில்வின் சில்வா பதவி வகித்தார். சோமவன்ச அமரசிங்கவிற்குப் பின்னரும் டில்வின் சில்வா கட்சியின் செயலாளர் பதவியை இதுவரை வகித்து வருகிறார்.

சோமவன்ச அமரசிங்க தலைமைத்துவத்தை விட்டு வெளியேறிய நேரத்தில், கூட்டணி அரசாங்கங்களுக்கு ஏற்ற விதத்தில் கட்சியை வழிநடத்தியது மற்றும் 1994 க்கு பின்னர் கட்சி முன்னெடுத்த தேசியவாத வேலைத்திட்டத்திற்கு பங்களித்தது உட்பட பல விமர்சனங்களை அவர் பெற்றிருந்தார்.

அதன்படி, 2014 ஆம் ஆண்டு அவர் தலைமையை விட்டு விலகி, ஜனதா விமுக்தி பெரமுனவின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைவராக பொறுப்பேற்றார்.

JVP கட்சியில் இருந்து விலகிய சோமவன்ச அமரசிங்க “ஜனதா சேவக பக்ஷய” என்ற புதிய அமைப்பை உருவாக்கி ஜனதா விமுக்தி பெரமுனவின் வேலைத்திட்டத்தை விமர்சித்தார்.

சோமவன்ச அமரசிங்க ஜூன் 15, 2016 அன்று இறந்தார்.


மணிக்கு பதிலாக திசைகாட்டி

பல்வேறு ஜனாதிபதித் தேர்தல்களில் பல்வேறு வேட்பாளர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளித்து வந்த ஜனதா விமுக்தி பெரமுன , பல ஆண்டுகளுக்கு பின் 2019ல் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, புதிய அரசியல் கூட்டணியுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.

2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன், தேசிய அறிஞர்கள் பேரவை என்ற தொழில் வல்லுநர்களைக் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டது, 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன், ஜனதா விமுக்தி பெரமுன உட்பட பல அமைப்புகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தியை உருவாகியது.

வழமையான “சிவப்பு” தீம் நிறம் மற்றும் “மணி” சின்னத்தை தவிர்த்து புதிய அரசியல் கட்சியின் கீழ் “திசைகாட்டி” சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 418,553 வாக்குகளை அதாவது 3% வாக்குகளை பெற முடிந்தது. அவரது அரசியல் எதிரிகள் அவர்களை 3% என கேலி செய்தனர்.

மீண்டும் 2020 பொதுத் தேர்தலில், அவர்கள் 3.84% வாக்குகளைப் பெற்றனர், எனவே அவர்கள் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களையும் ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தையும் மட்டுமே பெற்றனர்.

எவ்வாறாயினும், கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜே.வி.பி 544,154 வாக்குகளைப் பெற்றபோது, ​​அது 6 பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றி இருந்தது.

2022 ‘காலிமுகத்திடல் அரகலய போராட்டத்தின்’ ஒரு பகுதியாக ….

2019 ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு மக்களால் பாரிய போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதனால் பல கட்சிகள் காலிமுகத்திடல் அரகலய போராட்டத்தின் களத்தில் முகாமிட்டனர்.

அந்த போராட்டத்தின் தொடக்கத்தில், ‘தலைமை இல்லாத போராட்டம், தங்கள் கட்சி தலைமை ஏற்க தயாராக உள்ளது’ என தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் ஜேவிபி இளைஞர் சங்கமான “சோஷலிச இளைஞர் சங்கம்” (SYU) அதில் ஒரு அங்கமாக இருந்தது.

09 மே 2022 காலிமுகத்திடல் அரகலய போராட்டத்தின் மீது ராஜபக்ச விசுவாசிகள் தாக்குதல் நடத்தி, கோட்டாபய ராஜபக்சவை தனது பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதன் பின்னணியில், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜனதா விமுக்தி பெரமுனாவின் தொழிலாளர் அமைப்பான தொழிற்சங்க வேலை ஒருங்கிணைப்பு மையம் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை அறிவித்தது. இடையே வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட பல தொழிலாளர் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் விமர்சனத்துக்கு JVPயினர் உள்ளாகினர்.

பின்னர் ஜூலை 09 ஆம் திகதி அரச நிறுவனங்களை மக்கள் கையகப்படுத்திய மறுநாள் ஜனதா விமுக்தி பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த , ஹந்துன்நெத்தி உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்றத்தை கைப்பற்ற, மக்களை பாராளுமன்றத்திற்கு அருகில் வருமாறு கூறிவிட்டு , இறுதியில் தமக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை என அறிவித்து அங்கிருந்து வெளியேறிய போது ஏற்பட்ட வன்முறைச் செயல்கள் காலிமுகத்திடல் அரகலய போராட்டக்காரர்களது விமர்சனத்துக்கு உள்ளாகியது.

மாற்றம் ஏற்பட்டது எப்படி ?

இடதுசாரி சித்தாந்தத்திலிருந்து பரந்த மக்கள் இயக்கத்தை ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் தேசிய மக்கள் சக்தியை வென்றெடுப்பதற்கான அவர்களின் பயணத்தில் காணப்பட்ட முக்கிய மாற்றங்கள் என்ன என டாக்டர் நிர்மல் ரஞ்சித் தேவசிறியிடம் கேட்ட போது,

“முன்னாள் வியூகங்கள் பற்றி பேசும் போது, ​​மக்கள் விடுதலை முன்னணி தேர்ந்தெடுத்த வியூகங்கள் தோல்வியடைந்தன. 1988ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தகராறு ஏற்பட்டது. அதனால்தான் 1988 ஜனாதிபதித் தேர்தலில் சிறிமாவோவை தோற்கடிக்க உழைத்தார்கள். வாக்களிக்க போவோரை கொல்வோம் என்றார்கள். பிரேமதாச ஆட்சிக்கு வந்ததும் பலவீனமான ஆட்சியாளராக மாறுவார் என இந்த JVP யினர் எதிர்பார்த்தனர், ஆனால் அவர்களின் உத்தி அன்று முற்றிலும் தவறானது” என மருத்துவர் சுட்டிக்காட்டினார்.

“பின்னர் தேசியவாதத்திற்குச் சென்றாலும், பயங்கரவாதத்திற்குப் பிறகு கட்சி கட்டியெழுப்பப்பட்டது முதல், அவர்கள் வெவ்வேறு வழிகளில் சமூகமயமாக்க முயன்றனர். அவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு உத்திகளைப் பின்பற்றினர்.”

ஜனதா விமுக்தி பெரமுனவில் இருந்து தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அங்கத்தவர்கள் தேசிய மக்கள் படையை சமூகத்திற்கு கொண்டு செல்வதில் கணிசமாக பங்காற்றியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இலங்கையில் தற்போதுள்ள அரசியல் அமைப்பை மக்கள் நிராகரிக்கின்றனர். அதேபோன்று அந்த கட்சிகளும் ஒழுங்கமைக்கப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி சிறிது காலம் அப்படி இருந்தது. ஆனால் இப்போது அதுவும் இல்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தி நல்ல ஒழுக்கத்துடன் உள்ளது. அவர்கள்தான் இந்த மாற்றத்தை ஏற்படுத்துவார்கள், அப்படியாக ஒழுக்கமான போராளிகளை வைத்து இதுபோன்ற மாற்றத்தை ஏற்படுத்துவது கடினம் அல்ல” என்றார்.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதியாக வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்ச, தனது பதவிக்காலம் முடிவதற்குள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களின் அரகலய போராட்டத்தினால் நாட்டை விட்டு வெளியேறி பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு, பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய வாக்கெடுப்பு மூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார். .

தேசிய மக்கள் சக்தி 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒரு வருடத்திற்கும் மேலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது.

ஜனதா விமுக்தி பெரமுனா ஆரம்பத்திலிருந்தே ஏகாதிபத்திய எதிர்ப்புக் கருத்தை ஏற்றுக்கொண்டது மற்றும் அவர்களின் முழக்கங்களில் ‘இந்திய விரிவாக்கம்’ மற்றும் ‘யங்கி அனுதாபிகள்’ போன்ற வார்த்தைகளை உள்ளடக்கியது. எவ்வாறாயினும், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கும், தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ இந்திய விஜயத்துக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியான சில நிமிடங்களிலேயே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரையும் , இலங்கைக்கான சீனத் தூதுவரையும் சந்தித்தார். மேலும் அனுரகுமாரவுக்கு , அவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அனுரகுமார, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், அனைத்து நாடுகளுடனும் , நாட்டுக்கு மிகவும் சாதகமான வகையில் செயற்படுவதே தமது எதிர்பார்ப்பு எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.