அநுரகுமார அரசுக்கு இருக்கும் ஒரே மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தியே! – முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு.

“ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் மட்டுமே தற்போதைய அரசுக்கு இருக்கும் ஒரே மாற்று வழியாகும். நாடு எதிர்நோக்கும் சவால்களை முறியடிக்க ஐக்கிய மக்கள் சக்திக்கும் பணி இருக்கின்றது.”

இவ்வாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

“நாடு தற்போது பன்முக பல சவால்களை எதிர்கொள்கின்றது. சிறுவர் தினம் முதியோர் தினம் குறித்து பேசும்போது கூட இலட்சக்ககணக்கான பிள்ளைகள் பட்டினியால் வாடுகின்றனர். அவர்கள் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளனர். வேலைவாய்ப்புகள் இல்லாமல் இளைஞர்களும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளனர்.” – என்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

மஹரகம தேர்தல் தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி கட்சி செயற்பாட்டாளர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளன. நாட்டுக்குத் தீர்வுகளை வழங்கும் பொறுப்பு வெற்றி பெற்ற அணியினருக்கும் போலவே தோற்கடிக்கப்பட்ட அணியிருக்கும் காணப்படுகின்றன. இந்தபி பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் தயாராக வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்கும் குழுவாக அவர்கள் மாற வேண்டும்.

வெற்றி பெற்றவர்களிடம் மட்டும் பொறுப்புகளை ஒப்படைப்பது வங்குரோத்தான நாட்டுக்கு ஏற்புடையதல்ல. இதற்காக அனைவரும் கைகோர்க்க வேண்டும். நாட்டைகே கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் எதிர்க்கட்சி முன்னோடியான வேலைத்திட்டத்தைக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து பின்வாங்க முடியாது. இந்நாடு அனைவருக்கும் சொந்தமானது.

பிரச்சினைகளைத் தீர்க்கும் சக்தியாகவே ஐக்கிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றது. இந்த வெற்றி பொது வெற்றியாக அமைய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டுக்குத் தேவையான உற்பத்தித் தொழில்களை உருவாக்க வேண்டும். உற்பத்தித் தொழில் முறையைச் சீர்படுத்த வேண்டும். வாழ்வாதாரங்கள் உருவாக்கப்பட வேண்டும். புதிய தொழில் முனைவோர் உருவாக வேண்டும். ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்க முடியாது என்று கூறப்படுகின்றது. இத்தகைய கடினமான சூழ்நிலையில், பழமைவாத முறைகளுக்குச் செல்லாமல், புதிய வழிமுறைகளைக் கண்டறியும் திட்டத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. விமர்சனங்களோடு மட்டும் மட்டுப்பட்டுவிடக் கூடாது.

செய்வதாகச் சொல்லப்பட்ட காரியங்களைச் செய்ய முடியாதபோது, அவற்றைக் குறைகூறாமல் முற்போக்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பக் கல்வியை நடைமுறையில் யதார்த்தமான ஒன்றாக மாற்ற வேண்டும். ஸ்மார்ட் குடிமக்களை உருவாக்க வேண்டும்.

தற்போது கல்வித்துறையில் பல பிரச்சினைகள் உள்ளதால், பரீட்சைக்கு முன்பே வினாத்தாள்கள் கூட வெளிவருகின்றன. ஒரு நாடு என்ற வகையில் அதிக போட்டித்தன்மையுடன் உழைக்க வேண்டியுள்ளதால் சிறந்த குடிமக்களை உருவாக்கும் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். சிறுவர், சிறுமியர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் கல்வியில் மாற்றுத் தெரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.