இளைய சமூகத்தினரே மதுவை உங்கள் கைகளில் எடுக்காதீர்கள் யாழ். சங்கானையில் இன்று போராட்டம்.

சர்வதேச நல்லொழுக்க தினத்தை முன்னிட்டு வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் யாழ். சங்கானை பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்னால் நடைபெற்றது.

சங்கானையில் புதிதாக ஒரு மதுபானசாலை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. அந்த மதுபானசாலை அமைக்கவுள்ள இடத்துக்கு அருகாமையில் பாடசாலைகள், கல்வி நிலையங்கள், மதத் தலங்கள், குடிமனைகள் காணப்படுகின்றன. எனவே, அந்தப் பகுதியில் மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “மதுசார விலைகளைக் குறைத்து எமது சமூகத்தை அழிக்க வேண்டாம், போதையற்ற வாழ்வே ஆரோக்கியத்துக்கான வழி, எமது சமூகத்தை அழிக்கும் மது எமக்குத் தேவைதானா?, முடவனாக விரும்பும் மானிடனே மதுவைக் கையில் எடுக்காதே, இளைய சமூகமே மதுவை உங்கள் கைகளில் எடுக்காதீர், சிறுவர்களையும் மகளிரையும் மதுவுக்கு அடிமைப்படுத்தாதே” எனக் கோஷமிட்டு, பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

போராட்டத்தின் முடிவில் சங்கானை பிரதேச செயலர் திருமதி. கவிதா உதயகுமார் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதில் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினர், சங்கானை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினர், வலிகாமம் மேற்கு ஓட்டோ சங்கத்தினர், அந்திரான் தோற்பயிற்சி உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கத்தினர், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.