ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி பகிரங்க அறிவிப்பு ‘சங்கு’ சின்னம் எங்கள் வசம்!

வடக்கு, கிழக்கு முழுவதும் களமிறங்கத் தீர்மானம்
கொழும்பில் போட்டியிடுவது தெடர்பிலும் ஆராய்வு

“ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குத் தேர்தல் ஆணையகத்தால் தற்போது சங்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு, கிழக்கு முழுவதும் கூட்டணியாகச் சங்குச் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். அதேநேரத்தில் இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பிலும் ஆராயந்து வருகின்றோம்.”

இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியானது பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாக இருக்கின்றது. இந்தக் கூட்டசியில் நாங்கள் உட்பட ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் நாம் அதில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தோம். இந்தக் கூட்டணியின் சின்னமாககே குத்துவிளக்கு இருந்த்து.

ஆனால், இப்போது நடைபெற்று முடிவடைந்திருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களை ஒண்றிணைத்த தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியன இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருந்தது.

அந்தப் பொது வேட்பாளரின் தேர்தல் சின்னமாக சங்கு சின்னமும் வழங்கப்பட்டு அதற்கான பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டதற்கமைய தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இலட்சக்கணக்கில் மக்கள் அதற்கு வாக்களித்தும் இருந்தனர்.

இதேபோன்று பல்வேறு கட்சிகளை உள்ளடக்கியதாக ஒற்றுமையை வலியுறுத்தி ஓரணியில் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாக நாங்கள் போட்டியிடுகின்றமையால் தமிழ் மக்களின் ஒற்றுமையின் சின்னமாக விளங்கிய சங்கு சின்னத்தை எமது கூட்டணியின் சின்னமாக்குவதற்குத் தீர்மானித்திருந்தோம்.

இதற்கமைய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஒருமித்த தீர்மானமாக சங்கு சின்னத்தை அதில் அங்கம் வகித்த ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தது.

இதனடிப்படையில் சங்கு சின்னத்தை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் நேற்று தேர்தல் ஆணையகத்தால் சங்கு சின்னம் எமக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதற்கமைய எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாக ஒற்றுமையின் சின்னமான சங்கு சின்னத்தில் நாம் போட்டியிட இருக்கின்றோம். அதிலும் வடக்கு, கிழக்கு முழுவதும் நாம் போட்டியிடுகின்ற அதேநேரத்தில் கொழும்பிலும் இம்முறை போட்டியிடுவது தொடர்பில் ஆராயந்து வருகின்றோம்.” – என்றார்.
……………………

Leave A Reply

Your email address will not be published.