அமைச்சரவை தீர்மானத்தினால் சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம் முடக்கப்பட்டுள்ளது.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான மறைந்த ஆர்.சம்பந்தனின் கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லம் இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.

அமைச்சரவையின் ஒப்புதலுடன் , வயது மூப்பு காரணமாக இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை அவர் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப்பட்டார். இந்த இல்லத்தை மீண்டும் அரசாங்கத்திடம் பெற்றுக் கொள்வதற்கு இந்த தீர்மானத்தை மாற்றி புதிய அமைச்சரவை தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், நீதித்துறை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சுகளின் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை மீண்டும் அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை பத்திரத்தை அப்போதைய அமைச்சராக இருந்த தினேஷ் குணவர்தனவிடம் கையளித்திருந்த நிலையில், ஆட்சி மாற்றத்துடன் அமைச்சரவையின் அங்கீகாரம் நிறுத்தப்பட்டதாக தெரியவருகிறது. புதிய அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் அதற்கான பத்திரத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தன் 2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் இந்த உத்தியோகபூர்வ இல்லத்தைப் பெற்றார். பின்னர் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்று ஐம்பத்திரண்டு நாட்கள் ஆட்சியின் பின்னர் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்குவதற்கு அனுமதியளித்தார்.

பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தின் போது காணி அமைச்சராக இருந்த கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம், 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி, சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக உள்ளவரை அந்த வீட்டைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டார். குடிநீர் கட்டணம், மின் கட்டணம், தொலைபேசி கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவுகளை அரசே ஏற்றுக்கொண்டுதுடன், உத்தியோகபூர்வ இல்லத்தின் பராமரிப்பு சேவைகளுக்கான சம்பளமும் அரசே செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு அந்த வீட்டின் பழுதுபார்க்கும் பணிக்காக மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த பின்னரும் , இறக்கும் வரை அந்த வீட்டில்தான் வாழ்ந்தார். இவர் கடந்த ஜூலை 1ம் திகதி இறந்தார்.

Leave A Reply

Your email address will not be published.