கண்டி மாவட்ட ஜமகூ வேட்பாளர் தமுகூ சார்பில் பாரத் அருள்சாமி -இது நாடாளுமன்ற தேர்தல்; மாவட்டங்களில் நம்மவர் தெரிவாக வேண்டும் என்கிறார் மனோ.

இன்று கொழும்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் அங்கத்துவத்தை பெற்று கொண்ட பாரத் அருள்சாமி கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளராக போட்டியிடுவார் என ஜனநாயக மக்கள் முன்னணி பொது செயலாளர் முருகேசு பரணிதரன் கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் அறிவித்தார்.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியதாவது;

ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தேர்தல் முடிவுகள் மாவட்ட ரீதியாக அறிவிக்க பட்டாலும், தேர்தலில் முழு நாடும் ஒரே தேர்தல் மாவட்டமாக இருந்தது. முழு நாட்டுக்கும் பொதுவான வேட்பாளர்கள்தான் போட்டி இட்டார்கள். அதில் நண்பர் அனுர குமார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாம் இன்று எதிர்கொள்வது நாடாளுமன்ற தேர்தல். இது மாவட்டரீதியாக நடைபெறும் தேர்தல். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வெவ்வேறு வேட்பாளர்கள். ஆகவே ஜனாதிபதி தேர்தலை போல் இதில் வாக்களிக்க தேவை இல்லை. நமது மாவட்டங்களில் நமது மக்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் போக வேண்டும். அதுதான் எமது அபிலாசைகளில் தேசிய அரங்குக்கு கொண்டு செல்லும். சர்வதேசிய அரங்குக்கும் கொண்டு செல்லும்.

இன்று, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு அழகான இருட்டறையை போல் இருக்கிறது. வெளியே “சம உரிமை”, “நாம் இலங்கையர்”, “சட்டத்தின் ஆட்சி” என்ற பெயர் பலகைகள் இருக்கின்றன. இந்த பெயர் பலகை கோஷங்கள் தேசிய மக்கள் சக்தி சொந்த கோஷங்கள் இல்லை. அவை எங்கள் கோஷங்களும் ஆகும். நான் தேசிய ஒருமைபாட்டு அமைச்சராக இருந்த போது பேசிய, எழுதிய கோஷங்கள் ஆகும்.

அழகான இருட்டறைக்கு உள்ளே என்ன இருக்கிறது என எவருக்கும் தெரியவில்லை. மலையக மக்களின் வீட்டு காணி உரிமை அங்கே இருக்கிறதா?, வாழ்வாதார காணி உரிமை இருக்கிறதா? பெருந்தோட்ட மக்கள் இந்நாட்டின் மிகவும் பின்தங்கிய மக்களாக ஏற்று கொள்ளும் கொள்கை இருக்கிறதா? “சிஸ்டம் சேஞ்” முறை மாற்றத்தை பெருந்தோட்ட துறையில் ஆரம்பித்து, தோட்ட தொழிலாளர்களை பெருந்தோட்ட துறையில் கூட்டுறவு பங்காளிகளாக மாற்றும் கொள்கை இருக்கிறதா? என்பதை இன்று தேசிய மக்கள் சக்தி அறிவிக்க வேண்டும்.

இது எதையும் பகிரங்கமாக அறிவிக்காமல், மலையக மக்களின் வாக்குகளை நாடாளுமன்ற தேர்தலில், கோர தேசிய மக்கள் சக்திக்கு உரிமை கிடையாது. இது தெளிவாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். நாம் இன்று எதிர்கொள்வது மாவட்டரீதியாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

தம்பி பாரத் அருள்சாமியை ஜனநாயக மக்கள் முன்னணிக்கு உள்ளே வரவேற்கிறேன். தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அவர் போட்டி இடுவார். அவர் பாராளுமன்ற உறுப்பினாராக இருந்து கொண்டு கட்சி மாற வில்லை. இன்று எமது மலைநாட்டு முற்போக்கு அணியில் தன்னை அவர் இணைத்து கொண்டுள்ளார். தமிழ் பிரதிநிதித்துவத்துக்கு சமீபத்தில் கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற தூரதிஷ்ட சம்பவத்துக்கு அவர் பரிகாரம் தேடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.