ஓமந்தை வாள்வெட்டில் காயமடைந்தவரும் சாவு – பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வு.

காணிப் பிணக்கால் ஓமந்தையில் இடம்பெற்ற வாள்வெட்டில் படுகாயமடைந்த மற்றைய நபரும் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதனால், இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்தது.

வவுனியா – ஓமந்தை – கதிரவேலு பூவரசன்குளத்தைச் சேர்ந்த ரூ.திலீபன் (வயது 42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

உயிரிழந்த நபரும் அவரின் மருமகனும் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காணியைத் துப்புரவு செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த சிலர் அவர்கள் மீது மிளகாய்த்தூளை வீசிவிட்டு, அவர்களை வாளால் வெட்டினர் என்று கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ (வயது 38) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றைய நபரான திலீபன் படுகாயமடைந்த நிலையில் ஊரவர்களால் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

இரு குடும்பங்களுக்கு இடையே நிலவி வந்த காணிப் பிணக்கே இந்த வாள்வெட்டுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.