கொலை, கடத்தல் செய்யாதவர்கள் தமிழரசுக் கட்சியில் மட்டுமே போட்டி – மட்டு. வேட்பாளர் அறிமுக நிகழ்வில் சாணக்கியன் தெரிவிப்பு.

“தமிழ்த் தேசிய பரப்பில் கொலை செய்யாதவர்கள், கடத்தல் செய்யாதவர்கள், காட்டிக்கொடுக்காதவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி சின்னத்தில் மட்டுமே போட்டியிடுகின்றனர். ஏனைய கட்சிகளில் இவ்வாறான தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்திப்பும் மட்டக்களப்பு, கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் இதன்போது கருத்துத் தெரிவித்தனர்.

அந்தவகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறுகையில்,

“நீண்ட காலத்துக்குப் பின்னர் தூய்மையான தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்ட வேட்பாளர்களைக் கொண்டு இலங்கை தமிழரசுக் கட்சி களமிறங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எமது வேட்பாளர்கள் சிறந்த வேட்பாளர்கள் என்ற கருத்து நிலவுகின்றது.

எமது கட்சியில் ஊழலற்ற, கடந்த காலத்தில் மோசடிகளில் ஈடுபடாதவர்களை எமது வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கியுள்ளோம்.

ஏனைய கட்சிகள் இது தொடர்பில் பேச முடியாது. கடந்த காலத்தில் ஊழல், மோசடிகளில் அதிகளவில் ஈடுபட்டவர்கள் ஏனைய கட்சிகளில் போட்டியிடுகின்றார்கள்.

தமிழ்த் தேசிய பரப்பில் கொலை செய்யாதவர்கள், கடத்தல் செய்யாதவர்கள், காட்டிக்கொடுக்காதவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி சின்னத்தில் மட்டுமே போட்டியிடுகின்றனர். ஏனைய கட்சிகளில் இவ்வாறான தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

ஏனைய பிரதான கட்சிகளை பார்த்தால் தமிழ் பேசும் மக்களாகவே களமிறக்கப்பட்டுள்ளார்கள். ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி இரண்டிலும் இரு இனங்களையும் சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றார்கள். முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலத்தில் எமது கட்சியின் வேட்பாளர் தெரிவின்போது சிற்சில விமர்சனங்கள் இருந்தன. ஆனாலும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்கு தமிழரசுக் கட்சியை ஆதரிக்கக்கூடிய வகையில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

கடந்த காலத்தில் போட்டியிட்ட இருவர் மட்டுமே இம்முறை போட்டியிடுகின்றோம். ஏனைய 6 வேட்பாளர்களும் புதிய முகங்களாகக் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த நான்கு வருட காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தாலும் கூட இலஞ்சம், ஊழல் மோசடி, காணி அபகரிப்பிலேயே அவர்களின் காலங்களைக் கடத்தியிருந்தார்கள். இன்னுமொருவர் இதுதான் நான் இறுதி முறை என்று தேர்தலில் போட்டியிட்டு அவரது கூடுதலான காலத்தினை இலண்டனில் கழித்துவிட்டு தேர்தலில் குதித்திருகின்றார்.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்குத் தெரியும் தமிழரசுக் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற ஒரேயொருவர் நான். மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் எனது வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன். நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்பதற்காகவே உழைத்துக்கொண்டிருக்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.