எனக்கும் 5 மில்லியன் அமெரிக்க டொலரை இலஞ்சமாக வழங்க அன்று முயற்சித்தனர் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பரபரப்பு தகவல்.

“நான் பிரதமராக இருந்தபோது எனக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாக வழங்க முயற்சித்தனர். அதனை நான் மறுத்துவிட்டேன். இலஞ்சம் மற்றும் ஊழல் முழு நாட்டையும் அழிக்கும்.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற பட்டயக் கணக்காளர்களின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அந்த மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் பிரதமராக இருந்தபோது எனது அரசில் இருந்த இளைய அமைச்சர் ஒருவரின் கணவரால் ஐந்து மில்லியன் டொலர்கள் நாடாளுமன்றத்தில் எனது மேசைக்குக் கொண்டு வரப்பட்டது. “அதை எடுத்துக்கொண்டு இப்போது வெளியேறு. நான் உன்னைக் கைது செய்ய உத்தரவிடுவேன்” என்று நான் சொன்னேன். அந்த நபருடன் சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவரும் இருந்தார்.

ஊழலுக்குப் பழக்கப்பட்ட பெரியவர்களின் மனதை மாற்றுவது சாத்தியமில்லை. எனவே, சிறு வயதிலிருந்தே விழுமியங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.

எங்களில் ஒரு ஜனாதிபதி இருந்தார், அவர், “உங்களால் முடிந்த வரை திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள்“ என தனது அமைச்சரவையில் தெரிவித்தார். இதை அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களிடமும் கூறி வந்தார்.

எல்லோரும் திருடினார்கள், யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த அமைப்புதான் எமது நாட்டைச் சீரழித்துள்ளது.

தொழிலதிபர்கள் அவர்களின் திட்டங்களைப் பாதுகாக்க இலஞ்சம் கொடுக்கலாம் என்றாலும், பரவலான ஊழல் இறுதியில் நாட்டையே வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்லும்.

நீங்கள் உணராதது என்னவென்றால், நீங்கள் ஒரு திட்டத்துக்காக ஒருமுறை அல்லது இரண்டு முறை இலஞ்சம் பெறலாம். ஆனால், அதுவே முழு நாட்டின் நடைமுறையாக மாறும்போது நாடே அழியும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.