பழைய முகங்களைப் புறம் தள்ளி இளையோரை நாடாளுமன்றத்துக்கு இம்முறை அனுப்ப வேண்டும் தமிழர் – தமிழ் மக்களிடம் மணிவண்ணன் கோரிக்கை.

“கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் இருந்தவர்களைப் புறம் தள்ளுங்கள். கறைபடியாத கரங்களுடைய இளையோரை இம்முறை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கள்.”

இவ்வாறு தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தகுதியான வேட்பாளர்களுடன் களமிறங்கியுள்ளோம்.

இந்தத் தேர்தல் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தியல் காணப்படுகின்றது.

தென்னிலங்கை மக்கள் பழைய ஆட்சியாளர்களைத் துடைத்தெறிந்து, ஊழலற்ற, நேர்மையான அரசியல்வாதிகளைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளார்கள்.

அதனால், தென்னிலங்கையில் இருக்கக்கூடிய பல மூத்த அரசியல்வாதிகள் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர். ஆனால், வடக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்து போட்டியிட வேண்டும் என்ற பேரவாவுடன் மீண்டும் களமிறங்கியுள்ளனர்.

வடக்கில் எமது கட்சித் தலைவர் சி . வி விக்னேஸ்வரன் மாத்திரம்தான் தேர்தலில் இருந்து விலகி இளையோரிடம் கையளித்துள்ளார். மற்றையவர்கள் 15 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் இருந்தும் மக்களை எதுவும் செய்யாத நிலையிலும் தொடர்ந்தும் எம்.பி. பதவிக்கு ஆசைப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் இருந்தவர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும். வடக்கிலும் ஓர் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அதனால்தான் கற்றறிந்த இளையோரை நாங்கள் களமிறக்கியுள்ளோம். தமிழ் மக்கள் எங்களுக்கு ஒட்டுமொத்த ஆதரவையும் தர வேண்டும்.

நாங்கள் தமிழ் மக்களின் நம்பிக்கையை வீணடிக்காது செயற்படுவோம். தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் ஆளுமைமிக்க – ஆற்றல் உள்ளவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைகள் ஒரு கண் எனில் நீடித்த பொருளாதாரமும் மற்றைய கண்ணாக இருக்க வேண்டும். இரண்டு கண்களும் தமிழ் மக்களுக்குத் தேவையானது. நாம் இரண்டையும் சேர்த்தே முன்னெடுத்துச் செல்வோம்.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றை நிர்வகித்துள்ளோம். அதில் எங்களுடைய நிர்வாக ஆளுமைகளைக் காட்டியுள்ளோம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை முன்னெடுத்துச் சென்ற அதேவேளை பொருளாதாரத்தையும் முன்னெடுத்துச் சென்றோம்.

நாம் யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றில் ஆட்சியில் இருந்த கால பகுதியில்தான் கொரோனாத் தொற்றும் அதனைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டன. அவ்வாறான இடரான காலப் பகுதியில் 45 உறுப்பினர்களைக் கொண்ட மாநகர சபையில் நாங்கள் 10 உறுப்பினர்களுடன் வினைத்திறன் செயற்பட்டோம்.

நாடு பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளாத போதிலும் தற்போதும் தென்னிலங்கை கட்சிகள் இனவாத சிந்தனைகளுடன்தான் காணப்படுகின்றன. எனவே, தென்னிலங்கை கட்சிகள் வடக்கில் கால் பதிப்பது ஆபத்தானது.” – என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் ஏனைய வேட்பாளர்களான மிதிலைச்செல்வி சிறீ பத்மநாதன், உமாகரன் இராசையா, வரதராஜன் பார்த்தீபன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.