சல்மான் கானை கொல்ல சதி: தேடப்பட்ட நபர் கைது

பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்ட நபரை நவி மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹரியானாவின் பானிபட்டில் புதன்கிழமை (அக்டோபர் 16) சுகா என்ற அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

நவி மும்பையின் பான்வேல்லில் உள்ள நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டுக்குச் செல்லும் வழியில் அவரைக் கொலை செய்வதற்காக கடந்த ஜூன் மாதத்தில் நடந்த சதி முறியடிக்கப் பட்டதாக காவல்துறையினர் கூறியிருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் பந்த்ராவில் உள்ள சல்மான்கானின் வீட்டுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு இந்தச் சதி சம்பவம் நடந்தது.

ஹரியானாவைச் சேர்ந்த பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், தன்னையும் தன் குடும்பத்தினரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் தனது வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இவ்வாண்டு தொடக்கத்தில் சல்மான் கான் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

கடந்த ஜனவரி மாதத்தில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி பன்வாலில் உள்ள தனது பண்ணை வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக சல்மான் கான் தெரிவித்திருந்தார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மும்பை காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக சல்மான் கானின் இந்த வாக்குமூலம் இடம்பெற்றது.

சல்மான் கானை வேவு பார்க்கும் நோக்கத்துடன் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் நேஹ்ரா கும்பல்கள் அவரின் பந்த்ரா இல்லம், பான்வேல் பண்ணை வீடு மற்றும் படப்பிடிப்புத் தளங்களில் சல்மான் கானின் நடமாட்டத்தைக் கண்காணிக்க எழுபது பேரை களமிறக்கியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.