நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கிராம அலுவலர்களுக்குச் செயலமர்வு.

வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணிக்கும், முற்பகல் 11 மணிக்கும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

இதன்போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர், நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கடமைக்குச் சிறப்பான ஒத்துழைப்பு வழங்கிய கிராம அலுவலர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், இந்தக் கலந்துரையாடல் ஒரு பின்னூட்டலாகவே நடைபெறும் எனவும், ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் கற்றுக்கொண்ட பாடங்களுக்கமைய நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் கடமைகளில் வினைத்திறமையாக பங்களிப்பை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் செல்லுபடியற்ற வாக்குகள் அதிகமாகவிருந்த காரணத்தால் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வுச் செயற்பாடுகளைப் பிரதேச செயலக ரீதியாக வெளிக்கள உத்தியோகத்தர்கள் மூலம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதால் அதற்கான ஒத்துழைப்பையும் கிராம அலுவலர்கள் வழங்குமாறும் அரச அதிபர் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில் கிராம அலுவலகர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவி தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் விளக்கமளித்தார்.

இந்தச் செயலமர்வில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.