தலைவர் ஏற்காத ’13’ ஐ இப்போது அரசியல் தலைவர்கள் ஏற்கின்றனர் வேறு என்னதான் செய்வது என்று வழியின்றி அப்படி முடிவு என விளக்குகின்றார் ரவிகரன்.

”13ஆவது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், எமது அரசியல் தலைவர்கள் வேறு என்னதான் செய்வது என்று அதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அதில் காணி அதிகாரம் இல்லை. பொலிஸ் அதிகாரமும் இல்லை. பிறகு எதற்காக எங்களுக்கு அந்த அதிகாரப் பகிர்வு.?”

இவ்வாறு முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளருமான து.ரவிகரன் கேள்வி எழுப்பினார்.

ஆகையினால் இந்தியா இனிமேலும் பச்சோந்தித்தனமாக இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அபிவிருத்தியோடு எமது தீர்வை நோக்கிப் பயணிப்பதே எமது இலக்கு. ஆனால், எமது நிலம் இருந்தால் மாத்திரமே அந்த அபிவிருத்தியைச் செய்ய முடியும். எமது நிலம் எமது உரிமை. அது இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாரிய நிலப்பரப்புக்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. எமது போராட்டங்களின் ஊடாக குறுகிய அளவை என்றாலும் நாம் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

எமது மதத்தை அழித்து, பௌத்த மதத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று இனவாதிகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். பொலிஸ், இராணுவம் என நாட்டின் அனைத்து படைகளும் அவர்களுடையவை. இந்தப் படைகள் கொஞ்சம் கூட நீதி, நியாயம் இல்லாமல் பௌத்த மதத்துக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தமது விசுவாத்தைக் காட்டும் நோக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அதற்கு மாறாக நாங்கள் களத்திலே நிற்கின்றோம். எங்களைக் காத்தவர்கள் இன்று மௌனிக்கப்பட்ட நிலையில் மக்களாகிய நாங்கள் எமது உரிமைக்காகப் போராட வேண்டிய காலம் இன்னும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. போராடிக்கொண்டுதான் இருக்கின்றோம். தீர்வுதான் கிடைக்கவில்லை.

மாற்றம் என்று கூறப்படும் இந்த ஆட்சி ஒரு வருடத்தைக் கடந்த பின்தான் தெரியும் இதன் போக்கு எப்படி இருக்கின்றது என்று. வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சர்வதேசம் பாராமுகமாக இருக்கக்கூடாது. இந்தியா பச்சோந்தித்தனமாக இருக்கக்கூடாது. 13 ஆவது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், எமது அரசியல் தலைவர்கள் வேறு என்னதான் செய்வது என்று அதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அதில் காணி அதிகாரம் இல்லை. பொலிஸ் அதிகாரமும் இல்லை. பிறகு எதற்காக எங்களுக்கு அந்த அதிகாரப் பகிர்வு?

எமது நிலத்தை முழுவதுமாக பறித்து விட்டால் நாங்கள் எங்கே செல்வது? இலங்கைத் தமிழன் ஆண்ட பூமி. எனவே, எமக்கான தீர்வை ஏதோவொரு விதத்தில் இவர்கள் தரத்தான் வேண்டும். தட்டிக் கழிக்க முடியாது. எனவே, இதற்கு எதிராக எமது குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருக்கும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.