மிதிலைச்செல்வியின் துண்டுப்பிரசுரத்தை கிழித்து அநாகரிகமாக நடந்த அர்ச்சுனா! – தமிழ் மக்கள் கூட்டணி கடும் கண்டனம்.

தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் மிதிலைச்செல்வியின் தேர்தல் துண்டுப்பிரசுரத்தைச் சுயேச்சைக் குழு வேட்பாளரான வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கிழித்து அநாகரிகமாக நடந்து கொண்டதோடு அதனை முகநூலில் காணொளியாகவும் பதிவிட்டுள்ளார். இதற்குப் பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் மக்கள் கூட்டணியின் சக வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முகநூலிலே பதிவு ஒன்றையும் அவர் இட்டுள்ளார்.

அந்தப் பதிவில்,

“பெண்கள் தேர்தல் அரசியலுக்கு வரவேண்டும், பெண்களுக்கான ஒதுக்கீடுகள் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்று பெண்களுக்கான உரிமைக் குரல்கள் அனைத்துத் தரப்பினராலும் வலியுறுத்தப்படுகின்ற இந்தக் காலத்தில், தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் மிதிலைச்செல்வி தனது தேர்தல் பரப்புரையின்போது வைத்தியர் அர்ச்சுனாவுக்கு வழங்கிய துண்டுப்பிரசுரத்தை வைத்தியர் அர்ச்சுனா தனது திருவாயையும், தன்னுடைய சாப்பாட்டுக் கோப்பையையும் துடைக்கின்ற காணொளியை அவரே தன்னுடைய முகப்பு பக்கத்தில் ஒளிபரப்புச் செய்து வழமை போல் தனது பண்புகளையும் வக்கிரத்தைக் காட்டியுள்ளார்.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தன்னை ஒரு மேதாவியாகவும் தானே அநீதிகளுக்கு எதிராகக் கிளர்ந்திருக்கின்ற ஒரு பெரும் சக்தியாகவும் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்ற அர்ச்சுனா புரிந்த இந்தச் செயலானது நீதியானதா?

தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு பெண் வேட்பாளர் அவமதிக்கப்பட்ட இந்த விடயம் தொடர்பில் பெண் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்ற அதேநேரம் பெண்கள் தேர்தல் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகின்ற பெண்கள்சார் சமூக மட்ட அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் எடுக்கப் போகின்ற நடவடிக்கைகள் என்ன?” – என்று பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.