காரில் எரிந்த நிலையில் தொழிலதிபர் உடல்.. கொலை செய்யப்பட்டாரா?

நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் அருகே, எரிந்த நிலையில் இருந்த காரிலிருந்த தொழிலதிபரின் உடல் கூறாய்வில், அவர் மூச்சுத் திணறி பலியானது தெரிய வந்ததையடுத்து, அவரது 2 நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், டோயாட்டோ எஸ்யுவி கார் ஒன்று எரிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சாலையோரம் நின்றிருந்தது. அதில் உடல் கருகிய நிலையில் சஞ்சய் யாதவ் என்ற தொழிலதிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. முதலில் இதனை விபத்து என காவல்துறையினர் கருதினர்.

ஆனால், உடல் கூறாயவில், சஞ்சய் மூச்சுத் திணறி பலியானது தெரிய வந்ததையடுத்து கொலை வழக்காக மாற்றி விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இதில், சஞ்சய் நண்பர்கள் விஷால் மற்றும் ஜீத் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

திங்கள்கிழமை இரவு, கொலை செய்வதற்கு முன்பு, மூன்று பேரும் மது விருந்தில் பங்கேற்றுள்ளனர். பிறகு, நாயின் கழுத்தில் கட்டப்படும் கயிற்றைக் கொண்டு சஞ்சயை கொலை செய்த விஷால் மற்றும் ஜீத் இருவரும், சஞ்சய் அணிந்திருந்த நகைகளை திருடிக்கொண்டு தாத்ரி அருகே உள்ள வனப்பகுதியில் காரில் உடலை வைத்து தீவைத்து எரித்துள்ளனர்.

முதலில், சஞ்சய் மரணம் குறித்து குடும்பத்தாரிடம் சொன்ன போது, சஞ்சய் வீட்டிலிருந்து புறப்பட்டபோது விஷால் மற்றும் ஜீத்தை சந்திப்பதாகக் கூறிச் சென்றதை அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் சொன்னதை வைத்து, நண்பர்களை பிடித்து விசாரித்த போது உண்மை வெளிவந்தது.

பணம் மற்றும் நகைக்காக, அவரை கொலை செய்ததை குற்றவாளிகள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, கொலையாளிகளிடமிருந்து பணம் மற்றும் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஒருவர், நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.