‘வியட்னாமின் போக்குவரத்து விதிகளை இந்தியாவும் செயல்படுத்தினால் அனைவரும் பணக்காரர் ஆகிவிடலாம்.
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு தண்டனை அதிகரிக்க, ஜனவரி 1 முதல் புதிய போக்குவரத்து விதிகளை வியட்னாம் அறிமுகம் செய்துள்ளது.
பொதுமக்களின் பங்கேற்பு மூலம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான விதிகளையும் வியட்னாம் கொண்டுள்ளது. https://vietnamnet.vn இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின்படி, போக்குவரத்து விதிமீறல்களை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தும் குடிமக்களும் அமைப்புகளும் US$200 வரை வெகுமதி பெறலாம்.
போக்குவரத்து ஒழுங்கையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதில் சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்க இந்த வெகுமதி நோக்கம் கொண்டுள்ளது.
பொருளியல் நிபுணரும் நிதி ஆயோக் உறுப்பினருமான அரவிந்த் வீர்மணி உட்பட இணையவாசிகள் பலர், இந்தியாவிலும் இதுபோன்ற விதிகள் தேவை என அறைகூவல் விடுத்துள்ளனர்.
இந்தியாவும் இந்த விதிகளைச் செயல்படுத்தினால், கிட்டத்தட்ட அனைவரும் பணக்காரர் ஆகிவிடலாம் என சமூக ஊடகப் பயனர் ஒருவர் நகைத்தார்.
இந்தியாவில் அன்றாடம் ஏராளமான விதிமீறல்கள் இடம்பெறும் வேளையில், அவற்றைத் தெரியப்படுத்துவதால் கிடைக்கும் வருவாய் ஐடி ஊழியர்களின் சம்பளத்தையும் விஞ்சலாம் என சிலர் விளையாட்டாகக் கூறினார்.