சென்னை தொழிலதிபரின் ரூ.1,000 கோடி சொத்துகள், ரூ.912 கோடி பணம் முடக்கம்.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ரூ.912 கோடி பணமும் முடக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையின்போது பல்வேறு ஆவணங்களும்,மின்னிலக்க முறையில் இருந்த தகவல்களும் திரட்டப்பட்டன.
கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி, அதன் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துகளின் ஆவணங்களைப் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆண்டாள் ஆறுமுகம் பெயரில், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்ட ரூ.912 கோடி பணத்தையும் முடக்கி உள்ளதாக அமலாக்கத் துறையின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
சென்னை சேமியர்ஸ் சாலையில் வசித்து வரும் ஆண்டாள் ஆறுமுகத்தின் தந்தை தொழில் அதிபர், போரூரில் மிகப்பெரிய மருத்துவப் பல்கலைக்கழகத்தை அமைத்திருக்கிறார்.
வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த தகவலின்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏழு பேர் கடந்த சில நாள்களுக்கு முன்னர் சோதனையில் ஈடுபட்டனர்.
தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகம், அவரது தந்தை ஆறுமுகத்துக்குச் சொந்தமான ஆர்கேஎம் பவர்ஜென் தனியார் நிறுவனத்தின்மீது சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டத்தின்கீழ் நடந்து வரும் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.