காணாமல் போன சிறிய ரக விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு!

அமெரிக்க அலாஸ்காவில் காணாமல் போன சிறிய ரக விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், விபத்துக்குள்ளான ஒரு சிறிய பயணிகள் விமானம், கடல் பனிக்கட்டியில் இருந்ததாகவும், அதில் பயணித்த 10 பேரும் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், விமானத்தை தற்போது அணுக முடியாது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
குறிப்பாக, சமீபத்திய நாட்களில் அமெரிக்காவில் நடந்த மூன்றாவது பெரிய விமான விபத்து இதுவாகும்.
ஜனவரி 29 அன்று, வொஷிங்டனுக்கு வெளியே உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகில் ஒரு வணிக விமானமும் ஒரு இராணுவ உலங்கு வானூர்தியும் மோதிக்கொண்டன.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு மருத்துவ போக்குவரத்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பிலடெல்பியாவின் ஒரு பகுதியில் மோதியதில், விமானத்தில் இருந்த ஆறு பேரும் தெருவில் இருந்த மற்றொருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.