டிரம்ப் மோதலுக்குப்பின் ஸெலென்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு.

அமெரிக்க அதிபர் மாளிகையில் அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் ஆகியோர் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை சாடிய பின் ஸெலென்ஸிக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இரு தலைவர்களுக்கும் ஏற்பட்ட மோதலுக்கு அடுத்து சிறிது நேரத்திலேயே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குப் பகுதிகளைச் சேர்ந்த ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் ஸெலென்ஸ்கிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் திரு டிரம்ப்பை நேரடியாக விமர்சிக்கவில்லை என்றபோதிலும் அவர்கள் தெரிவித்த கருத்து ஸெலென்ஸ்கிக்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது என்று செய்தித் தகவல்கள் கூறுகின்றன. இது காலங் காலமாக நட்பு நாடுகளாக இருந்து வந்துள்ள அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
பிரெஞ்சு அதிபர் மெக்ரோன், “ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. உக்ரேனிய மக்கள் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.தொடக்கத்திலிருந்து போர் புரிந்து வருபவர்களை மதிப்போம். ஏனெனில் அவர்கள் தங்களுக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் ஐரோப்பாவுக்கும் கண்ணியம், சுதந்திரம், பாதுகாப்பு வேண்டி போர் புரிகின்றனர்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் சென்ற வாரம்தான் அதிபர் டிரம்ப்பை சந்தித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக, அமெரிக்காவை ஸெலென்ஸ்கி மதிக்கவில்லை என்று டிரம்ப் சாடினார். அத்துடன், அமைதிக்கு ஸெலென்ஸ்கி தயாராக இல்லை என்றும் கூறினார்.
ஸெலென்ஸ்கிக்கு உடனடியாக ஆதரவு தெரிவித்தவர்களில் போலந்து பிரதமர் டோனல்ட் டஸ்க்கும் ஒருவர். சமூக ஊடகத்தில் “நீங்கள் தனித்து விடப்படவில்லை,” என்று அவர் பதிவிட்டார்.
இதுபோல் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரு உயர் தலைவர்களான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயனும் ஐரோப்பிய மன்றத் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவும் கூட்டறிக்கை ஒன்றில், “உங்களது கண்ணியம் உக்ரேனிய மக்களின் வீரத்தைப் பிரதிபலிக்கிறது,” என்று கூறினர்.