2023-க்கு பிறகு பிறந்தவர்கள் புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் – மத்திய அரசு

இந்திய கடவுச்சீட்டு சட்டம் 1980 விதிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இதன்படி கடவுச்சீட்டு பெறுவதற்கு இனி பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
‘கடந்த, 2023ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் புதிதாக கடவுச்சீட்டு பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.
மாநகராட்சி, நகராட்சி அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்கப்படும். அரசிதழில் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
எனினும் 2023, அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவர்களுக்கு இத்தகைய பிறப்பு சான்றிதழ் தேவை இல்லை.
பள்ளிச் சான்றிதழ், நிரந்தர கணக்கு அட்டை, ஓய்வூதிய உத்தரவு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கடவுச்சீட்டு விண்ணப்பத்துக்கு பிறந்த தேதிக்கான ஆவணங்களாக பயன்படுத்தலாம்.
இது குறித்து பேசிய அதிகாரிகள், நாட்டில் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து வருபவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் இல்லை. இருப்பினும், 1969 ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதால், பிறப்புச் சான்றிதழ்களை மட்டுமே பிறந்த தேதிக்கான சான்றாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.