பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்புவிழா தள்ளிப்போகிறது

பாம்பன் பாலம் கட்டி 110 ஆண்டுகளைக் கடந்த நிலையில், அதன் அருகிலேயே சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரூ.545 கோடியில் புதிதாக ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தின் நடுப்பகுதியில் சுமார் 75 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலமும் கட்டப்பட்டுள்ளது.
பாம்பன் கடலில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியால் புதிய ரயில் பாலம் திறந்து வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அருகிலுள்ள பழைய தூக்குப்பாலத்திலும் உப்புக் காற்றால் துருப்பிடிக்காத அலுமினியச் சாயம் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க வர உள்ளதால் இதுவரை 3 கட்டமாக ரயில் மற்றும் கப்பல் இயக்கியும் ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு விட்டது. ஆனால், இன்னும் திறப்பு விழாவுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.
ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச் மாதம் பிறந்துள்ள நிலையில் இதுவரையிலும் புதிய ரயில் பாலம் திறப்பு விழா தேதி அறிவிக்கப்படாமல் நிலையே இருப்பதால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.