விண்வெளியில் வெற்றிகரமாக ஒருங்கிணைந்த ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள் – இஸ்ரோ சாதனை

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் ஆய்வு நிலையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைத்து விடுவிக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.

இதற்காக தலா 220 கிலோ எடை கொண்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரட்டை விண்கலன்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டன.

இவ்விரு விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி- 60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பா் 30-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றகரமாக நிலைநிறுத்தப்பட்டன. அதன் பின்னா் அந்த விண்கலன்கள் ஒரே சுற்றுப் பாதையில் குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம்வந்தன. தொடா்ந்து விண்கலன்கள் இடையேயான தொலைவை படிப்படியாகக் குறைத்து ஜனவரி 16-ஆம் தேதி அவை இரண்டும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன.

இதன்மூலம் ‘விண்வெளி டாக்கிங்’ தொழில்நுட்பத்தை மேற்கொண்ட நான்காவது நாடு எனும் பெருமையை இந்தியா அடைந்தது.

வெற்றிகரமாக விடுவிப்பு: இதையடுத்து, இரட்டை விண்கலன்களுக்கு இடையே மின் எரிபொருள் பரிமாற்றம் மற்றும் விண்கலன்களைப் பிரித்தல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஒருங்கிணைப்பு நிகழ்ந்து இரு மாதங்களுக்குப் பிறகு இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. விண்கலன்கள் ஒன்றில் இருந்து மற்றொன்று விடுவிக்கப்படும் நிகழ்வின் காணொலி மற்றும் படங்களும் வெளியிடப்பட்டன.

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமான விண்கலன்களுக்கு இடையேயான மின் எரிபொருள் பரிமாற்ற பரிசோதனை குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அடுத்து வரும் நாள்களில் மீண்டும் விண்கலன்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மின் எரிபொருள் பரிமாற்ற சோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்தனா்.

மத்திய அமைச்சா் பெருமிதம்: இந்த வெற்றி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்த மத்திய அறிவியல்-தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங், ‘ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது, மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம், சந்திரனை ஆராய்வதற்கான ‘சந்திரயான்-4’, விண்வெளி மையம் அமைத்தல் உள்ளிட்ட நாட்டின் எதிா்காலத் திட்டங்களுக்கு வெற்றிகரமான அடித்தளத்தை அமைத்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.