சென்னையில் நகை பறித்தவர் ஆந்திராவில் கைது: மூளையாக செயல்பட்டதாக நம்பப்படுபவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சென்னையில் ஏழு இடங்களில் தங்கச் சங்கிலிக் கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படுபவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சென்னையில் பெண்களிடம் நகைகளைப் பறித்த கொள்ளையர்களில் ஒருவரான சல்மான், ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஓங்கோல் நகரில் பிடிப்பட்டுள்ளான். ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் புதன்கிழமை (மார்ச் 26) விளக்கம் அளித்தார்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) ஒரே நாளில் ஏழு பேரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை கைது செய்தோம். ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர காவல்துறை கைது செய்தது.

அவர்கள் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை அடையாளம் காட்ட தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்றோம். அப்போது அங்கே அவர்கள் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காவல்துறையினர் மீது சுட்டனர். ஆனால் நல்வாய்ப்பாக காவல்துறையினருக்கு காயம் ஏற்படவில்லை. காவல் வாகனம் மீது குண்டுகள் பாய்ந்தன. தற்காப்புக்காக, காவல்துறையினர் சுட்டதில் ஜாபர் பலியானார் என்று அவர் தெரிவித்தார்.

குற்றத்துக்குப் பயன்படுத்தியிருப்பது கர்நாடக பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் என்பது தெரிய வந்துள்ளது.

சென்னையில் நேற்று கொள்ளையர்களால் பறிக்கப்பட்ட செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமானத்துக்கு உள்ளிருந்துதான் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மிகப்பெரிய கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள். கைதான இருவரும் தனித்தனியே விமானத்தில் சென்னை வந்து ஒன்றாக கொள்ளையடித்துவிட்டு மீண்டும் தனித்தனியாக விமானத்தில் தப்புவது வழக்கம். இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 26 சவரன் மதிப்புள்ள ஆறு செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

செயின் பறிப்பில் ஒரு பெண்மணி கீழே விழுந்ததில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

ஈரானிய கொள்ளையர்கள் என்பது மும்பை சுற்றுவட்டாரப் பகுதியினர்தான். கைதான மூவரில் ஒருவர் முன்கூட்டியே தமிழகம் வந்து தேவையான ஏற்பாடுகளை செய்து விடுவார்.

இந்த ஈரானிய கொள்ளையர்கள் மகாராஷ்டிர மாநிலம் அபிவேலி பகுதியில் இருகிறார்கள். இவர்கள் சென்னையை விட்டுத் தப்பிச் சென்றிருந்தால், அபிவேலிப் பகுதிக்குள் சென்று இவர்களைப் பிடிப்பது மிகவும் கஷ்டம்.

குற்றத்தில் ஈடுபட்டுவிட்டு, உடைகளை மட்டும் மாற்றிக்கொண்டார்கள். ஷுவை மாற்றவில்லை அதை வைத்து எளிதாக அவர்களை அடையாளம் காண முடிந்ததாகவும் அருண் தெரிவித்துள்ளார்.

மும்பையில் இவர்கள் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக மகாராஷ்டிரா மாநில காவல்துறை தெரிவித்தது. இந்தியா முழுவதும் இது போல செயின் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் சொன்னார்.

Leave A Reply

Your email address will not be published.