வெளியானது இலங்கையின் சனத்தொகை எண்ணிக்கை – வடக்கு மாகாணத்தில் குறைந்தளவு சனத்தொகை!

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும்.
இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் சனத்தொகை 14 இலட்சம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாகிய 15 ஆவது தேசிய சனத்தொகை கணக்கெடுப்பு 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டது.
சனத்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் சனத்தொகை வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகின்றது.
மேல் மாகாணம் அதிக சனத் தொகை கொண்ட மாகாணமாக உள்ளது, அங்கு மொத்த சனத் தொகையில் 28.1 சதவீதம் பேர் வசிக்கின்றனர்.
அதேவேளை, 5.3 சதவீதம் பேருடன் வடக்கு மாகாணம் குறைந்தளவான சனத்தொகையைக் கொண்ட மாகாணமாக உள்ளது.
24 இலட்சத்து 33 ஆயிரத்து 685 பேருடன் கம்பஹா மாவட்டம் சனத்தொகையில் முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 23 இலட்சத்து 74 ஆயிரத்து 461 பேருடன் கொழும்பு மாவட்டம் அதிகளவான சனத் தொகையைக் கொண்டுள்ளது.
குருநாகல், கண்டி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் தலா 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் காணப்படுகின்றனர்.
மறுபுறம், வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு (ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 542), மன்னார் (ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 674), கிளிநொச்சி (ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 434) மற்றும் வவுனியா (ஒரு இலட்சத்து 72 ஆயிரத்து 257) ஆகிய மாவட்டங்கள் மிகக் குறைந்தளவான சனத்தொகை கொண்ட மாவட்டங்களாகத் தொடர்ந்து காணப்படுகின்றன.
முல்லைத்தீவு மாவட்டம் 2.23 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது, அதேவேளை வவுனியா 0.01 சதவீதத்துடன் மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது.
கொழும்பு மாவட்டம் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 3 ஆயிரத்து 549 பேருடன் அதிக சனத் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது.
அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 50 நபர்கள் வசிக்கின்றார்கள்.