வருகிறது மனித உரிமைகளை பாதுகாக்கும் புதிய சட்டம்: நடப்பில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுகிறது!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான ஆரம்பக் கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் நீதி அமைச்சில் நடைபெற்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்ஸி அர்ஸகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலின்போது, தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.

புதிய சட்டம் உலகளாவிய பயங்கரவாதம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்றும், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நாட்டின் அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மீறாத வகையில் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.

கடந்த கால அரசாங்கங்கள் இந்த திருத்தச் சட்டங்களை கொண்டு வருவதற்கு உரிய ஆர்வத்துடன் செயல்படவில்லை என்றும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கான விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் அமைச்சர் இங்கு குழு அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

மே மாத ஆரம்பத்தில் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகங்களின் கருத்துக்களைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் குழுவுக்கு அறிவுறுத்தினார்.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நெரின் புள்ளே, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட, சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆகியோரும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைவுத் திணைக்களம், இலங்கை பொலிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி உயர் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

அமெரிக்க வரி பிரச்சனையில் சிக்கியுள்ள இலங்கை , ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்றுக் கொள்ளாத பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யாது போனால் , இலங்கை GSP பிளசையும் இழக்க நேரிடலாம் என பொருளாதார நிபுணர்கள் இணைய கலந்துரையாடல்களின் மூலம் அரசுக்கு உணர்த்தி வருவதன் ஒரு அங்கமாகவே , இந்த மாற்றம் நிகழ்வதாக தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.