பெஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மனைவி மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு செய்தி அனுப்பிய பயங்கரவாதிகள்!

பெஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மனைவி மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பயங்கரவாதிகள் செய்தி அனுப்பியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தனர்.

அப்போது ஆயுதங்களுடன் அப்பகுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு ஜம்மு – காஷ்மீரில் நடந்த மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் சமயத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

மோடிக்கு அனுப்பிய செய்தி

கர்நாடகாவின் ஷிவமோகாவைச் சேர்ந்த மஞ்சுநாத் – பல்லவி தம்பதியினர் மகனுடன் ஜம்மு – காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

பெஹல்காமில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் மனைவி, மகன் கண்முன்னே மஞ்சுநாத்தை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து பல்லவி கூறியதாவது:

“நான், என் கணவர் மற்றும் மகன் மூவரும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தோம். நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பெஹல்காமில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது என் கண்முன்னே அவரை கொன்றனர். கெட்ட கனவுபோல் இருக்கிறது.

நான்கு பேர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். என் கணவரை கொன்றதை போல் என்னையும் கொன்றுவிடுங்கள் என்று அவர்களிடம் கூறினேன். அப்போது, உன்னை கொல்ல மாட்டேன், நடந்ததை உங்கள் பிரதமர் மோடியிடன் போய் சொல் என்று ஒரு பயங்கரவாதி தெரிவித்தார்” என்றார்.

பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 26 பேரும் ஆண்களே ஆவர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. சில பெண்களுக்கு லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளது.

நாடு திரும்பிய மோடி

செளதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த மோடி, பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பயணத்தை பாதியில் முடித்துவிட்டு இன்று காலை தில்லி திரும்பினார்.

வெளியுறவுத் துறை அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனையும் மேற்கொண்டுள்ளார்.

மேலும், ‘இக்கொடூர தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பவா்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவாா்கள். அவா்களின் தீய செயல்திட்டம் ஒருபோதும் வெற்றிபெறாது. பயங்கரவாதத்தை எதிா்த்துப் போராடுவதற்கான எங்களின் உறுதி அசைக்க முடியாதது. அது இன்னும் வலுவடையும்’ என்று மோடி கண்டனத்தை பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.