பிள்ளையானின் விசாரணையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த பல கொலைகள் அம்பலம்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் விசாரணைகளில், கிழக்கு மாகாணத்தில் நடந்த அரசியல் ரீதியான கொலைகள் உட்பட பல குற்றச் செயல்கள் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை சமூகத்தில் பேசப்படாத பல மர்மமான குற்றச் செயல்கள் குறித்த தகவல்களும் வெளிவந்து கொண்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

பிள்ளையான் தனது அரசியல் நோக்கங்களுக்காக மட்டக்களப்பில் பல பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றது தொடர்பிலும் தற்போது தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

பிள்ளையான் தொடர்பான விசாரணைகள், எல்.ரீ.ரீ.ஈ அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற பின்னர் அவர் எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிராக நடத்திய போர்கள் மற்றும் அந்த யுத்த சூழ்நிலையில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் மற்றும் கொலைகள் தொடர்பானது அல்ல என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிள்ளையானின் தலைமையின் கீழ் அவரது அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக மட்டக்களப்பை மையமாகக் கொண்டு பல குற்றச் செயல்கள் நடந்துள்ளதாகவும், அந்த குற்றச் செயல்கள் ஒவ்வொன்றாக தற்போது வெளிவந்து கொண்டிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கடந்த 08 ஆம் திகதி பிள்ளையானை கைது செய்தனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் உள்ளார்.

விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் பிள்ளையானின் சாரதி கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பேராசிரியர் சிவசப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டதாகவும், பிள்ளையானின் கட்டளையின் பேரில் நடந்த கொலைகள் உட்பட பல குற்றச் செயல்கள் குறித்த தகவல்கள் அதன் பின்னரே வெளிவருவதாகவும் விசாரணைப் பிரிவினர் கூறுகின்றனர்.

தற்போது பிள்ளையானின் சாரதியும் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.