யாழ். மாநகர சபையில் தமிழரசை ஆதரிக்க மணி அணி யோசனை! – விக்கியைச் சமரசம் செய்யப் பெரும்பாடு.

வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபை உட்பட யாழ். மாவட்டத்தில் தாம் போட்டியிடாத சபைகளில், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்த தமிழ் மக்கள் கூட்டணி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது என்று தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும், தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனும் இது தொடர்பில் சில கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“யாழ்ப்பாணம் மாநகர சபையின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், வி.மணிவண்ணனின் அரசியல் கனவில் பெரும் சறுக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டு அமைக்க வாய்ப்பாக – தற்போது யாழ். மாநகர சபை உள்ளிட்ட சில சபைகளில் தமிழரசுக் கட்சியை ஆதரிக்க வி.மணிவண்ணன் விரும்புகின்றார்.
இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரனுடன் அவர் சில பல பேச்சுக்களை நடத்தியும் விட்டார்.
எனினும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரனை இந்த முடிவுக்குச் சமரசம் செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
எனினும், சி.வி.விக்னேஸ்வரன் தரப்போ தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றில் விரும்பிய ஒன்றுக்கு வாக்களிக்க மக்களைக் கோருவதே சரியென நிலைப்பாட்டில் உள்ளது. விக்னேஸ்வரனைச் சமரசம் செய்ய முயன்றால் வி.மணிவண்ணன் தரப்பினர் தமது நிலைப்பாட்டை விரைவில் பகிரங்கப்படுத்துவார்கள்.” – என்றுள்ளது.