கிளிநொச்சியில் நீதி கோரி உறவுகள் பெரும் போராட்டம்.

கிளிநொச்சியில் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் போராட்டத்தில் ஈடுபட் டனர்.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் இந்தப் போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகள் தெரிவிக்கயில்,
“2 ஆயிரத்து 984 ஆவது நாளாகவும் எமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். எமது உறவுகளைத் தேடி அலைந்து திரிகின்றோம். இதுவரையில் ஆட்சியில் இருந்த எந்த அரசும் எமக்கான உரிய தீர்வைப் பெற்றுத்தரவில்லை. சர்வதேசத்திடம் ஒரு முகமும் எம்மிடம் ஒரு முகமுமாக அரசு செயற்பட்டு வருகின்றது. தற்போதைய அரசு கூட ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எமது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய தீர்வு பெற்றுத் தரப்படும் என வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் இதுவரையில் எந்தவிதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.” – என்றனர்.