துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் படுகாயம்.

கட்டுநாயக்காவில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கட்டுநாயக்கா, ஹினடியன பிரதேசத்தில் இன்று காலை 5.35 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீடொன்றில் இருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
29 வயதுடைய இளைஞரே துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்.
இவர் பணம் வட்டிக்குக் கொடுத்தல் மற்றும் பல வர்த்தக நிலையங்களை நடத்தி வருகின்றார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிதாரிகள் இருவரும் ரி – 56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.