போதைப் பொருள் பாவனையினை தடுப்பது தொடர்பான விசேட விழிப்புணர்வு செயலமர்வு!

வட பகுதியில் மாணவர்கள் மத்தியில் போதைவஸ்து பாவனை சடுதியான அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மாணவர்களிடம் பரவி இருப்பதை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட செயலக சிறுவர் பிரிவினரின் ஏற்பாட்டில் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தொடர்ச்சியாக விசேட விழிப்புணர்வு செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் குறித்த செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக இன்று(17) காலை 9.00மணிக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் போதைப் பொருள் பாவனையினை தடுப்பது தொடர்பான விசேட விழிப்புணர்வு செயலமர்வு சிறப்புற இடம்பெற்றது.
குறித்து செயலமர்வின் வளவாளராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
இச் செயலமர்வில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் உயர்தர பிரிவின் அனைத்து துறை மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது போதைப் பொருள் பாவனை, அதனால் ஏற்படும் பாதிப்புக்கள், சமூக சீரழிவுகள், உலகளாவிய ரீதியில் அடிமையானவர்களின் சான்றாதாரங்கள், மாணவர்களின் சிந்தனை நடத்தைகள், போதைப்பொருள் பாவனை தொடர்பாக மாணவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய விடயங்கள், சட்ட ரீதியான விடயங்கள் முதலிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.