வடக்கு ஆளுநருக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுங்கள்! – ஜனாதிபதிக்கு சீ.வீ.கே. கடிதம்.

“வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அரசமைப்பைத் தொடர்ந்து மீறி வருகின்றார். அவருக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுங்கள்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் இரண்டாவது கடிதம் எழுதியுள்ளார்.
01.12.2022 திகதியிடப்பட்டு ஆங்கிலத்தில் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு:-
வடக்கு மாகாண ஆளுநரின் அரசமைப்பு மீறல்:
மேற்குறிப்பிட்ட விடயத் தலைப்பிலான எமது 24.11.2022 ஆம் திகதிய கடிதத்தின் தொடர்ச்சியாக எழுவது,
வடக்கு மாகாண சபையால் 2017 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியக நியதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 10.10.2018 ஆம் திகதி ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்பட்டு 2054/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி யில் பிரசுரிக்கப்பட்ட நியதிச் சட்டம் ஒன்று அமுலில் இருக்கையில், அதே விடயத் தில் அதற்கு ஒத்ததான புதிய நியதிச்சட்டமொன்றை உருவாக்கிய ஆளுநரின் மாகாண நிர்வாகம் தொடர்பான மற்றும் நியதிச் சட்டவாக்கம் தொடர்பான கேலிக்கூத்தான செயற்பாட்டை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.
ஏற்கனவே ஒரு நியதிச் சட்டம் அமுலில் இருந்தமை பற்றி, அதனைப் பிரதி பண்ணிய ஆளுநர் மிகத் தெளிவாக அறிந்திருந்தார் என்பது இதனால் வெளிப்படை.
ஆளுநரால் நியதிச் சட்டம் எனக் கூறப்படும் ஆவணத்தின் உள்ளடக்கம் 90 வீதம் மேலே குறிப்பிடப்பட்ட மாகாண சபையால் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டத்தை ஒத்ததாகவே உள்ளது.
அதிலுள்ள முக்கிய மாற்றம் பணியகத்தின் முகாமைத்துவ சபையின் அமைப்பு தொடர்பானதாகும்.
ஏனைய உறுப்பினர்களை தமது நோக்கங்களைப் பூர்த்தி செய்வதற்காக வெளியே இருந்து நியமிக்கும் அதிகாரத்தைத் தமதாக்கிக் கொள்வதற்காகவே இவ்வாறு செயற்பட்டுள்ளார்.
ஊடகச் செய்திகளின்படி தமது வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக சுனில் திஸாநாயக்க என்பவரை நியமித்தமையும், அவர் பாய்ந்தடித்து பலாலி விமான நிலையம் இம்மாதம் 12 ஆம் திகதி முதல் மீளவும் சேவைகள் ஆரம்பிக்கும் என ஊடக அறிக்கை வெளியிட்டமையிலிருந்து வெளிப்படையாகின்றது.
ஆச்சரியப்படும் வகையில் இதுவும் இலங்கையின் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரான முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் அதிகாரங்களை முறையற்ற விதத்தில் தமதாக்கிக் கொண்டமையாகக் காணப்படுகின்றது.
இந்த ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசமைப்பு மீறல்களுக்கான குறியீடாக இவை அமைவதால் நான் மேலும் ஆழமாகச் செல்ல விரும்பவில்லை.
இவற்றுக்கு எதிரான தங்கள் மிகத் துரிதமான, சாத்தியமான நடவடிக்கைக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன – என்றுள்ளது.