இந்தியாவுக்கு இவ்வளவு கடன் இருக்கா? நிலவரத்தை தெளிவாக சொன்ன மத்திய நிதியமைச்சகம்!

இந்திய அரசின் ஒட்டுமொத்த கடன் அளவு 147.19 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கடன் உள்ளிட்ட நிலவரங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதன்படி, கடந்த ஜூன் மாத இறுதியில் 145.72 லட்சம் கோடியாக இருந்த கடன் அளவு, செப்டம்பர் மாத இறுதியில் ஒரு சதவீதம் அதிகரித்து, 147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், பங்குகள் மூலம் 4.22 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், 4 .6 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், அரசு பத்திரங்களுக்கான திறந்தவெளி சந்தை நடவடிக்கைகள் எதனையும் இந்த காலாண்டு காலத்தில் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு, 638 புள்ளி ஆறு நான்கு பில்லியன் டாலர் என்ற அளவிலிருந்து ஒரு வார காலத்தில் குறைந்து செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி 532 புள்ளி ஆறு ஆறு பில்லியன் டாலர்களாக இருந்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.