குட்டித் தேர்தலை நடத்துவதற்கு அரசு ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை – நீதி அமைச்சர் தெரிவிப்பு.

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு விருப்பத்தைத் தெரிவிக்கவும் இல்லை. எதிர்ப்பைத் தெரிவிக்கவும் இல்லை.”
இவ்வாறு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
‘அரசு உள்ளூராட்சிசபைத் தேர்தலை நடத்தாதா?’ என்று அவரிடம் வினவியபோது,
“உண்மையில் தேர்தலை நடத்துவது அரசு அல்ல. தேர்தலை நடத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுதான். அரசின் பொறுப்பு அதற்கான நிதியை வழங்குவதுதான்.
தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு விருப்பதைத் தெரிவிக்கவும் இல்லை. எதிர்ப்பைத் தெரிவிக்கவும் இல்லை. நாட்டின் பொருளாதார நிலைமையை அரசு மக்களுக்கு விளக்கிக் கூறியுள்ளது.
மக்கள் எப்படிப்பட்ட பொருளாதாரச் சிக்கலில் உள்ளார்கள் என்பதை எல்லோரும் அறிவோம். இருந்தும், பணம் இல்லை, தேர்தலை நடத்தமாட்டோம் என்று அரசு சொல்லவில்லை. தேர்தலுக்காக அரசு ஆயிரம் கோடி ரூபாவை ஒதுக்கி வைத்துள்ளது” – என்றார்.