கிழக்குக் கடற்பிராந்தியத்தில் எண்ணெய்க் கப்பல் தீ பிடிப்பு – மாலுமி உள்ளிட்ட பணியாளர்கள் மீட்பு

அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பிராந்தியத்தில் MT New Diamond எனும் எண்ணெய்க் கப்பல் இன்று காலை தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.
சங்கமன்கண்டியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் குறித்த கப்பல் தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.
குவைத்திலிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற பனாமாவுக்குச் சொந்தமான குறித்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் மீட்பு பணிகளுக்காக இலங்கைக் கடற்படையினரால் 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருகோணமலையிலிருந்து 2 கப்பல்களும், அம்பாந்தோட்டையிலிருந்து ஒரு கப்பலும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலின் மாலுமி உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள், இலங்கைக் கடற்படையின் மற்றுமொரு கப்பலுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும், உதவிக்கு விமானப்படையும் அழைக்கப்பட்டுள்ளது எனவும் கடற்படையின் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.