பொலிஸ் திணைக்களத்தின் 154வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரமதானப் பணி.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை பொலிஸ் நிலையம், சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும் கல்முனை மாநகர சபை சாய்ந்தமருது ஏ வலயத்தின் திண்மக் கழிவகற்றல் பிரிவும் இணைந்து சாய்ந்தமருது கடற்கரையோர பிரதேசத்தை துப்பரவு செய்யும் சிரமதானம் பணி (03) முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ஜெயசுந்தரவின் வழிகாட்டலிலும், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தவின் தலைமையிலும், கல்முனை சமூக பொலிஸ் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட்டின் நெறிப்படுத்தலிலும் இச்சிரமதானம் இடம்பெற்றது.
இதன்போது கரையோர சூழலிலுள்ள கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டதுடன் கரையோரச் சூழல் சுத்தப்படுத்தப்பட்டதோடு குறிப்பாக சுற்றுச்சூழல் பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாகவும் குறித்த சிரமதானப்பணி
முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இச்சிரமதானத்தில் கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகள், பொதுமக்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், கல்முனை மாநகர சபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு சிரமாதன பணியில் ஈடுபட்டனர்.