நீட் தேர்வு.. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய வழக்கு..!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை தகுதியாகக் கொண்டு சட்ட விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் சபரிஸ் சுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ள மனுவில், நீட் தேர்வு அறிமுகம் மற்றும் அதை தொடர்வது, தமிழகத்தின் கிராமப்புற மாணவர்களை பாதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வை அறிமுகம் செய்தது, கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாக உள்ளதாகவும், மருத்துவக் கல்லூரிகளில் அரசு இடங்களில் மாணவர்களை அனுமதிக்கும் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாடு அரசை கட்டுப்படுத்தாது என அறிவித்து உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற நீட் தேர்வு நிபந்தனைக்கான சட்ட விதிகளை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.